என்னடா இது புது ரோதனை.. ஓட்டுக்களை பிரிக்க போவது 3வது அணியா? நோட்டாவா?!
சென்னை : தமிழக தேர்தலுக்கு இன்னும் 29 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளும், அரசு அதிகாரிகளும் முழு மூச்சாக தேர்தல் பணியை கவனித்து வருகின்றனர்.
பிரதான கட்சிகளான அதிமுக.,வும், திமுக.,வும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளில் படு பிஸியாக இருந்து வருகின்றன.
இந்த இரண்டு கட்சிகளின் தலைமையையும் ஏற்க மறுத்த கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை அமைக்க முயற்சி செய்து வருகின்றன.
மூன்றாவது அணி சாத்தியமா
தமிழகத்தை பொறுத்த வரை அதிமுக அல்லது திமுக கூட்டணியில் தான் அனைத்து கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திப்பது வழக்கம். மிக அரிதாகவே மூன்றாவது அணி அமைந்துள்ளது. இந்த முறை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐஜேகே கட்சியும், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் இணைந்து மூன்றாவது அணி அமைக்க முயற்சித்து வருகின்றன.
பச்சைக்கொடி காட்டாத கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை, தங்கள் கூட்டணியில் இணைய வரும்படி சரத்குமாரும் பாரிவேந்தரும் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை இவர்களின் அழைப்பை கமல் ஏற்பதாகவோ, மறுப்பதாகவோ எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. அதே சமயம், திருமாவளவன் போன்றோரை தங்கள் கூட்டணியில் இணைய வருமாறு கமல் அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் திருமா நன்றி சொல்லி முடித்து விட்டார்.
மூன்றாவது அணியால் ஓட்டுக்கள் பிரியுமா
அரசியல் என்று வரும் போது சினிமா நடிகர்கள் மீதான மோகம் தமிழகத்தில் பெரிய அளவில் இல்லை என்றே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவேளை மூன்றாவது அணி அமைந்து, அதற்கு ரஜினி ஆதரவு அளித்தால் ஓட்டுக்கள் ஓரளவு பிரிய வாய்ப்புள்ளது. ஆனால் தேர்தலுக்கு மிக குறுகிய நாட்களே உள்ளதால் மூன்றாவது அணி அமைவதும், அதற்கு ரஜினி போன்ற சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் ஆதரவு அளிப்பதும் சந்தேகம் தான்.
பலரின் வெற்றியை பறித்த நோட்டா
2013 ம் ஆண்டு நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலின் போது நோட்டா அறிமுகம் செய்யப்பட்டது. யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற வாக்காளர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் உரிமையை அளிப்பதற்காகவும், ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும் கொண்டு வரப்பட்டது. இதுவரை நடந்த தேர்தல்களில் நோட்டா பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத போதிலும், பல வேட்பாளர்களின் வெற்றியை நூலிழையில் பறித்து சென்றுள்ளது.
நோட்டாவை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்களா
2014 லோக்சபா தேர்தலில் நோட்டாவுக்கு தமிழகத்தில் மட்டும் 1.41 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. அதிகபட்சமாக திமுக வேட்பாளர் ஆ.ராசா போட்டியிட்ட நீலகிரி தொகுதியில் நோட்டாவிற்கு 46,000 ஓட்டுக்கள் கிடைத்தன. அதே சமயம் 2019 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நோட்டாவிற்கு பதிவான ஓட்டுக்கள் 1.28 சதவீதமாக குறைந்தது.
டஃப் கொடுக்குமா நோட்டா
இந்த முறை அதிக கட்சிகள், அதிக வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். யாருக்குப் போடுவது என்பதில் அவர்கள் எரிச்சலடைந்தால், கடுப்பாகி நோட்டாவுக்கு கணிசமான ஓட்டுக்கள் பதிவாக வாய்ப்புள்ளது. இதனால் சரியான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. அப்படி செய்தால் மட்டுமே கட்சிகளுக்கு ஓட்டு பதிவாகலாம். இல்லாவிட்டால் கட்சிகள், அவர்களின் வேட்பாளர்கள் மீதான அதிருப்தியை காட்ட அதிகமானவர்கள் நோட்டாவை தேர்வு செய்யும் மனநிலை உருவாக அதிக வாய்ப்புள்ளது.