"நம்பிக்கையே போயிடுச்சுங்க".. ஒதுக்கி தள்ளிய சசிகலா! பேச்சையே நிறுத்திய டிடிவி.. பெரிதான "பாச" மோதல்
சென்னை: டிடிவி தினகரனுக்கும் சசிகலாவிற்கும் இடையிலான மனஸ்தாபம் பெரிதாகி உள்ளதாகவும். இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதே இல்லை என்றும் அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் வார வாரம் பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுக்குழு வழக்கில் அடுத்த மாதம் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் பக்கம் அடுத்தடுத்து நிர்வாகிகள் சாய்ந்து வருகிறார்கள்.

இது போக இன்னொரு பக்கம் சசிகலா ஓ பன்னீர்செல்வம் உதவியுடன் அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சசிகலாவிற்கும் தினகரனுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறையில் இருந்து சசிகலா வந்ததில் இருந்தே சசிகலா - டிடிவி தினகரன் உறவு அவ்வளவு சரியாக இல்லை. இவர்கள் பெரிதாக சந்தித்துக்கொள்வது இல்லை.
அதிமுகவில் நடந்த சில விஷயங்கள், அமமுகவை தொடங்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சசிகலா - டிடிவி தினகரன் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்பட்டது. ஏன் குடும்ப நிகழ்வுகளில் கூட சசிகலா டிடிவி தினகரனை சந்திக்கவில்லை.
இவர்கள் இருவரும் குடும்ப நிகழ்வுகளுக்கு தனி தனியாக வந்து சென்றனர். தனது சகோதரர் திவாகரன் உடன் கூட சசிகலா மீண்டும் ராசியானார். பின்னர் தனது குடும்ப உறுப்பினர்கள் பலரிடமும் அவர் மீண்டும் பேசினார். ஆனால் டிடிவி தினகரன் உடன் மட்டும் சசிகலா இடைவெளியை கடைபிடித்தார். இவர்கள் உறவு மட்டும் சுமுகமான நிலையை இன்னும் எட்டவில்லை.

இதன் காரணமாகவே சசிகலா மீது சமீபகாலமாக வருத்தத்தில் இருக்கிறார் டி.டி.வி. தினகரன். பேச்சுவார்த்தையையும் முழுமையாக நிறுத்திக் கொண்டாராம். சித்திக்கான அரசியலை இனி நாம் முன்னெடுக்க கூடாது என தம்மிடம் பேசும் நம்பிக்கைக் குரியவர்களிடம் ஆதங்கப்பட்டு வருகிறார் தினகரன்.
இதற்கு என்ன காரணம் என விசாரித்தபோது, ''தனது சகோதரர் திவாகரனிடமும், தனது கணவரின் சகோதரர் எம்.ராமச்சந்திரனிடமும் தான் அனைத்து அரசியல் விவகாரங்களையும் கொடுத்துள்ளார் சசிகலா. அதேபோல, தினகரனிடம் எந்த அரசியலையும் வைத்துக் கொள்ளக்கூடாதுன்னு சசிகலாவுக்கு அறிவுறுத்தியுள்ளார் திவாகரன்.
இதையெல்லாம் அறிந்து கொண்ட தினகரன், சசிகலாவுடனான பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டார்'' என்று தெரிவிக்கிறார்கள். சசிகலா தரப்பில் இது குறித்து விசாரித்தபோது, '' திவாகரன் நடத்தி வந்த அரசியல் கட்சியை கலைத்து விட்டு அக்காள் சசிகலாவோடு அவர் இணைந்ததிலிருந்தே தினகரனை ஓரங்கட்டினார் சசிகலா. ரகசியமாக செய்ய வேண்டிய அனைத்து அரசியல் விவகாரங்களையும் கவனிக்கும் பொறுப்பினை திவாகரனிடம் சசிகலா கொடுத்து விட்டார்.

மேலும், சில கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சசிகலாவின் நம்பிக்கையை இழந்து விட்டார் தினகரன். அதனாலேயே அவரை ஓரங்கட்டி வருகிறார் சசிகலா. சசிகலாவின் பாராமுகத்தை உணர்ந்து தினகரனும் சித்தியுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் பேச்சுவார்த்தைகள் இல்லை என்கிறார்கள். ஆனால், ஒரே உறவுகளுக்குள் நடக்கும் இந்த மன வருத்தங்கள் எல்லாம் எத்தனை நாளைக்கோ ? '' என்று சொல்கின்றனர்.
முக்கியமாக அதிமுகவில் எல்லோரும் ஒன்றாக இணைந்தால் அதில் தினகரன் இணைவாரா? அல்லது தனியாக அமமுகவை தொடர்ந்து நடத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications