தான்தோன்றி தனமாக செயல்பட்டால் இதுதான் நிலைமை: இந்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடம்-பூவுலகின் நண்பர்கள்
சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீனாவில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ஆட்சியாளர்கள் தங்களின் செயல்பட்டு முறைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் மக்கள் வெகுண்டு எழுவார்கள் என்ற கூற்று மெய்பிக்கப் பட்டு இருப்பதாக ஜி சுந்தர்ராஜன் தனது ட்விட் பதிவில் தெரிவித்துள்ளார்.
உலகில் கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்த சீனாவுக்கு மீண்டும் கொரோனா பெருந்தொற்று கவலையாக மாறியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது. ஆனாலும் ஜீரோ கோவிட் பாலிசி என்று கூறி கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சீனா கொரோனாவை பெருமளவு கட்டுப்படுத்தியது.
சஞ்சு சாம்சனுக்கு இவ்ளோ ஆதரவா? கத்தார் கால்பந்து உலகக்கோப்பையில் சம்பவம் -வாய்பிளக்க வைத்த ரசிகர்கள்
தினசரி பாதிப்பு 30 ஆயிரம்
உலக நாடுகள் எல்லாம் தவித்தாலும் சீனாவில் பெரிதாக பாதிப்பு இல்லை. தற்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் வைரஸ் பரவலின் தீவிரம் தணிந்துவிட்டது. ஆனால், இப்போது கொரோனா வைரஸ் பரவலால் சீனா ஆட்டம் கண்டு வருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரம்.. 40 ஆயிரம் என்று பதிவாகி வருவதால், சீனா மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருக்கிறது. பல லட்சம் பேர் வசிக்கும் நகரில் ஒருவருக்கு கொரோனா என்றால் கூட ஒட்டு மொத்த நகரமும் முடக்கப்படுகிறது.
வீதிகளில் இறங்கி போராட்டம்
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. இதனால் கொதித்து போன சீன மக்கள் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக வெளிப்படையாக போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பல்கலைழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வீதிகளில் இறங்கி போராடினர். போராட்டக்காரர்கள் பலரும், எங்களுக்கு சுதந்திரம் தான் வேண்டும், கட்டுப்பாடுகள் வேண்டாம் என்று கோஷங்கள் எழுப்பிய படி போராடினர்.
ஜி ஜின்பிங்கிற்கும் கடும் தலைவலி
சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பியதையும் காண முடிந்தது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தற்போது அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது சீன அரசுக்கு அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் கடும் தலைவலியை கொடுத்துள்ளது. இந்த நிலையில், பூவூலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி சுந்தர்ராஜன், தான் தோன்றித்தனமாக செயல்படும் ஆட்சியாளர்கள் தங்களின் செயல்பட்டு முறைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் மக்கள் வெகுண்டு எழுவார்கள் என்ற கூற்று மெய்பிக்கப் பட்டு இருப்பதாக ட்விட் பதிவில் வெளியிட்டுள்ளார்.
கருத்துச் சுதந்திரம்
இது தொடர்பாக ஜி சுந்தர்ராஜன் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- சீனாவில் அதிபர் ஜீபிங்கிற்கு எதிரான போராட்டங்கள் மாணவர்களால் முன்னெடுக்கப்படுகின்றன, எங்களுக்கு தேவை "ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, கருத்துச் சுதந்திரம்" என அதிபர் படித்த பல்கலைக்கழக வளாகத்திலேயே கோஷங்கள் அதிர்கின்றன. தான்தோன்றிதனமாக செயல்படும் ஆட்சியாளர்கள் தங்களின் செயல்பாட்டு முறைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் சாதாரண மக்கள் வெகுண்டு எழும் காலம் விரைவாகும் என்கிற கூற்றை சீனாவில் நடைபெறும் போராட்டங்கள் மெய்பிக்கின்றன. இந்தியாவின் ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு பாடம்" என்று பதிவிட்டுள்ளார்.