கிடைத்த “பவர்”.. அசைவத்துக்கு மாறிய ஜெகதீசன்! உடனே சரவெடி.. தமிழக கிரிக்கெட் வீரரின் உலக சாதனை
சென்னை: விஜய் ஹசாரே கோப்பையில் 5 சதங்களையும் ஒரே போட்டியில் 277 ரன்களையும் குவித்து அசத்திய ஜெகதீசன் தமிழ்நாடு வீரர் ஜெகதீசன் கிரிக்கெட்டில் சாதிப்பதற்காக பல்வேறு வகைகளில் தயாராகி இருக்கிறார். அதில் ஒன்றுதான் உணவு முறை மாற்றம்.
தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் விக்கட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் ஜெகதீசன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றாலும் சில போட்டிகளில் மட்டுமே இவருக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அதிலும் பெரிய அளவில் சோபிக்க முடியாமல் போனதால் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்ற அவரது கனவை அடைய முடியாமல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
விடுவித்த சிஎஸ்கே
இருந்தாலும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த அவர் முயன்றார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை ஜெகதீசனுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று கிடைத்தது. ஐபிஎல் இல் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற்றப்படும் வீரர்கள் பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்று இருந்தது.
தடைபட்ட பாதைகள்
டிஎன்பிஎல் தொடரில் ரன் அவுட் ஆன பிறகு தனது அணி வீரர் பாபா அபரஜித்திடம் நடு விரலை காட்டி செய்கை செய்தது, சையத் முஸ்தாக் அலி கோப்பையில் 6 போட்டிகளில் 118 ரன்களை மட்டுமே எடுத்தது, இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டது என இந்திய அணியில் ஜெகதீசன் விளையாடுவதற்கான பாதைகள் ஒவ்வொன்றாக தடைபட்டன.
உலக சாதனை
இதனால் விரக்தியின் உச்சத்தில் இருந்த ஜெகதீசனுக்கு விடியலாக அமைந்து இருக்கிறது விஜய் ஹசாரே கோப்பை. தொடர்ந்து 5 போட்டிகளில் சதம், அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் என உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதல் தர கிரிக்கெட்டில் படைத்த சாதனைகளை தவிடுபொடியாக்கி அனைவரின் புருவத்தையும் உயர்த்தை செய்திருக்கிறார் ஜெகதீசன்.
பாராட்டு மழை
இந்திய கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் தொடங்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மைக் ஹஸ்ஸி வரை பலரது வாழ்த்து மழையில் நனைத்து கொண்டிருக்கிறார் ஜெகதீசன். கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைப்பதற்காக முழு உழைப்பையும் கொட்டி இருக்கிறார் ஜெகதீசன் என்பதை அவரது பயிற்சியாளர் அளித்த பேட்டியின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
பயிற்சியாளர்
8 வயதில் இருந்து ஜெகதீசனுக்கு கிரிக்கெட் பயிற்சியளித்து வரும் குருசாமி இதுகுறித்து தெரிவிக்கையில், "இதற்குதான் பல ஆண்டுகளாக நான் காத்திருந்தேன். அணியிலிருந்து நீக்கப்படுவோமோ என்ற அச்சத்திலும், மன அழுத்தத்திலும் ஜெகதீசன் இருந்தார். ஆனால், தனக்கான வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்." என்றார்.
குடும்பத்தின் ஆதரவு
ஜெகதீசனுக்கு அவரது குடும்பத்தின் ஆதரவும், உறுதுணையும் அதிகம் இருந்திருக்கிறது. அவரது தந்தை ராஜன் நாராயணன் ஜெகதீசனுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார்.
"மக்களிடம் என்னுடைய சிறப்பான திறனை காட்ட வேண்டும். அடிப்படைகளை கற்பதையும் பயிற்சிகளில் ஈடுவதையும் தவறாமல் செய்தேன்." என்கிறார் ஜெகதீசன்.
அசைவ உணவு
கிரிக்கெட் சாதிக்க எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருந்த ஜெகதீசன், சைவ உணவு முறையிலிருந்து அசைவத்துக்கு மாறி இருக்கிறார். எந்த ஒரு நல்லதையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்தேன் என அவர் கூறுகிறார். சைவ உணவு முறையை பின்பற்றும் ஜெகதீசனின் குடும்பத்தினர் இதை ஏற்றுக்கொண்டு இருக்கின்றனர்.
அம்மாவின் கண்டிஷன்
ஆனால் வீட்டில் அசைவம் சாப்பிடக்கூடாது என்ற கண்டிஷனை மட்டுமே ஜெகதீசனின் தாயார் போட்டு உள்ளார். இதுகுறித்து பேசிய ஜெகதீசன், "அசைவம் சாப்பிட்டால் மேலும் பலனளிக்கும் என்று நம்பினேன். எனவே அது பழகுவதற்கும் சுலபமாக இருந்தது. புதிய விசயங்களை கற்பதுடன் நல்ல உணவையும் எடுத்துக் கொள்ளவேண்டும். உணவு முறையும் ஒரு முக்கியமான அம்சம்." என்றார்.