பொது சிவில் சட்டம் பற்றி பாஜகவுடன் விவாதிக்கத் தயார்! இடம் நாள் குறிக்கவும்! ஜெயினுல் ஆபிதீன் சவால்!
சென்னை: பொது சிவில் சட்டம் பற்றி பாஜகவுடன் விவாதிக்கத் தயார் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் ஜெயினுல் ஆபிதீன் சவால் விடுத்துள்ளார்.
குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருப்பது செட்டப் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது ஜெயினுல் ஆபிதின் கூறியதாவது;

பொது சிவில்சட்டம்
''நாங்கள் பொது சிவில்சட்டம் பற்றி விவாதிப்பதற்கு பல வருடங்களாக பாஜகவுக்கு அழைப்பு கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம், யாரும் வரவில்லை. வேலூர் இப்ராஹிம் வந்தாலும் அவர் பாஜகவின் சார்பில் வரவேண்டும் அல்லது வேறு யார் வந்தாலும் மோடி, அமித்ஷா உட்பட யார் வந்தாலும் பாஜகவின் சார்பில் வரவேண்டும். அந்த விவாதத்தில் தோற்றுப் போனால் பாஜகவின் சார்பில் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். நாங்கள் பொது சிவில் சட்டம் பற்றி விவாதிக்க தயார்.''

குஜராத்தில் செட்டப்
''குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த குறிப்பிட்ட தொகுதியில் பாஜக அதிக வாக்கு பெற்று உள்ளது என்றால் முடிவுகள் சந்தேகத்திற்குரியது. மேலும் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமித்து உள்ளனர். அதுவும் அவர் பணி நிறைவு பெறும் ஒரு நாளைக்கு முன்பாகவே நியமித்து உள்ளனர் என்றால் என்ன காரணம், வாக்குச்சீட்டு முறை தான் சரியான தீர்வாகும் இயந்திரத்தின் மூலம் குறிப்பிட்ட நபர்களை வெற்றி பெற செட்டப் செய்திட முடியும்.''

பாபர் மஸ்ஜித்
''முஸ்லிம்களுக்கு பாபர் மஸ்ஜித் வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை என்றாலும் அநியாயத்தை யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காக சில அமைப்புகள் டிசம்பர்6 ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். சிறுபான்மையினருக்கு வழங்கி வரும் உதவித்தொகை பல்வேறு வகையில் நிறுத்தப்பட்டு வருகிறது. இது முஸ்லிம்களை புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.''

அண்ணாமலை
''திமுக அமைச்சர்களில் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை ஊழலைப் பற்றி பேசக் கூடாது. ஆட்சியில் இல்லாதபோதே அண்ணாமலை மத்திய அரசு திட்டங்களை அமல்படுத்துவதற்கு எங்கெங்கு கமிஷன் வாங்கினார் என்ற பட்டியலை வெளியிடுவேன் என்று காயத்ரி ரகுராம் சொல்லுகிறார். அவர்கள் கட்சியில் உள்ளவர்களே அவரைப் பற்றி ஊழல் புகார் சொல்லும் போது அவர் எப்படி ஊழலை பற்றி பேச முடியும். '' இவ்வாறு ஜெயினுல் ஆபிதீன் கூறினார்.












Click it and Unblock the Notifications