முஸ்லிம்கள் இரையாகிவிடக் கூடாது.. சதிகளை முறியடிக்க ஓரணியில் நிற்போம் - ஜவாஹிருல்லா வேண்டுகோள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : எவ்வளவு மோசமாக உணர்வுகள் தூண்டப்பட்டாலும் பொதுமக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் வன்முறைக்கு இரையாகிவிடக் கூடாது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தை அமளிக் காடாக்கும் பாஜகவின் சதித்திட்டத்தை தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக நல்லிணக்கம், சமய நல்லிணக்கம் தழைத்தோங்கும் பூமியான தமிழ்நாட்டின் அமைதியைப் பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

ஆர்எஸ்எஸ் நேரடியாகவே பேரணிகளை நடத்த அனுமதி பெற்றுள்ள சூழல் மிகவும் கவலைக்குரியதாகும் என்றும் தெரிவித்துள்ளார் ஜவாஹிருல்லா.

தமிழ்நாட்டில் பதற்ற சூழல்

தமிழ்நாட்டில் பதற்ற சூழல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வரும் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் பேரணி நடத்தவுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் தீய செயல்களில் ஈடுபடும் உண்மை குற்றவாளிகளை சரியாக புலனாய்வு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுறுசுறுப்பு காட்டும் ஆளுநர்

சுறுசுறுப்பு காட்டும் ஆளுநர்

ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூகநீதியின் நிலைக்களமான தமிழ்நாட்டில், பாஜகவின் சனாதன கொள்கையை நுழைத்துவிட பெரும் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அரசியல் சாசனத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ்ஸின் முழுநேர ஊழியர் போல செயல்படுவதும், சனாதனக் கொள்கையையும், அதை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையையும் பகிரங்கமாக ஆதரித்து பல கூட்டங்களிலும் பேசி வருகிறார். நெடுங்கால சிறைவாசிகள் விடுதலை குறித்த கோப்புகளைக் கிடப்பில் போடும் ஆளுநர், ஆர்எஸ்எஸ் கொள்கைகளை வளர்ப்பதற்கு அதிக சுறுசுறுப்பைக் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

அருவருப்பு அரசியல்

அருவருப்பு அரசியல்

கட்சியில் பதவி பெறுவதற்கும், காவல்துறை பாதுகாப்பு பெறுவதற்கும், பிரபலமாவதற்கும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்கும் தங்கள் இடங்கள் மீதும் வாகனங்கள் மீதும் தாங்களே குண்டுவீசி பலமுறை சிக்கிக்கொண்டு அம்பலமானவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 26.09.2022 தேதியிட்ட முரசொலி நாளேடு இதைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நடந்திருப்பது பல சந்தேகங்களை உருவாக்குகிறது. அண்மைக் காலமாக பாஜக தமிழகத்தில் அமைதியை சீர்குலைத்து மதக் கலவரங்களை நடத்தி அரசியல் ஆதாயம் தேடிட தொடர்ந்து முயன்று வருகிறது. பாஜக தலைவராக இருந்த எல்.முருகனின் வேல் யாத்திரை முதல் இப்போதைய தலைவர் அண்ணாமலை நடத்திவரும் அருவருப்பு அரசியல் வரை யாவுமே தமிழ்நாட்டில் அமைதியை காவுகொள்ளும் நோக்கிலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

கலவர அரசியல்

கலவர அரசியல்

நேற்று கோவையில் காவல்துறையினர் உட்பட அனைவரையும் மிரட்டும் வகையில் அண்ணாமலை ஆற்றிய உரையும் இந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்குக் கிடைத்துள்ள அனுமதி இவர்களுக்கு கலவர அரசியலில் மேலும் நம்பிக்கையை விதைத்துள்ளது. ஆர்எஸ்எஸ்ஸின் தமிழக வடிவமான இந்து முன்னணி மூலம் இதுவரை நடத்தப்பட்ட ஊர்வலங்களில் பெரும்பான்மையானவை கலவர நோக்குடன் நடத்தப்பட்டவையே ஆகும். இப்போது ஆர்எஸ்எஸ் நேரடியாகவே பேரணிகளை நடத்த அனுமதி பெற்றுள்ள சூழல் மிகவும் கவலைக்குரியதாகும். முஸ்லிம்களிடையே பீதியை விளைவிக்கும் முயற்சிகள் ஒன்றிய பாஜக அரசாலும், தமிழக பாஜகவாலும், சங்பரிவார கும்பலாலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், தமிழக அரசு பன்மடங்கு விழிப்போடும் கவனத்தோடும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு ஃபாசிஸ்டுகளை ஒடுக்க வேண்டும்.

முஸ்லீம்கள் இரையாகிவிடக்கூடாது

முஸ்லீம்கள் இரையாகிவிடக்கூடாது

சமூக நல்லிணக்கம், சமய நல்லிணக்கம் தழைத்தோங்கும் பூமியான தமிழ்நாட்டின் அமைதியைப் பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் தீய செயல்களில் ஈடுபடும் உண்மை குற்றவாளிகளை சரியாக புலனாய்வு செய்து கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ஃபாசிஸ்டுகளால் எவ்வளவு மோசமாக உணர்வுகள் தூண்டப்பட்டாலும் பொதுமக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அதற்கு இரையாகிவிடக் கூடாது. அமைதியோடும், அதிஉறுதியோடும், அச்சமற்றும் நின்று, ஆரிய சதிகளை முறியடித்திட சாதி மத பேதமற்று திராவிடத் தமிழர்கள் ஓரணியில் நின்றிட வேண்டும் என்றும் பணிவோடு விழைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+