ஜெயலலிதா மரணம்.. 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து மூன்று மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016, செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கேயே சுமார் 75 நாட்கள் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் 2016 டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார்.

ஆறுமுகசாமி ஆணையம்
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக்கப் பலரும் சந்தேகம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அரசு, இது குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையத்தை நியமித்தது. சுமார் மூன்று ஆண்டுகள் கடந்த போதிலும், ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை எந்தவொரு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. இருப்பினும் ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், சுப்பிரமணி என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் விசாரணை ஆணையம் 2017ஆம் ஆண்டே அமைக்கப்பட்டாலும் இதுவரை அந்த ஆணையம் ஒரு இடைக்கால அறிக்கை கூட தாக்கல் செய்யவில்லை என்றும் எனவே விசாரணையை முடித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

3 மாதங்கள்
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், இன்னும் மூன்று மாத காலத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஏன் உத்தரவிடக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்து தமிழ்நாடு அரசு ஆறு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

ஜெயலலிதா மரணம்
தமிழ்நாடு தேர்தல் பிரசாரத்தின்போதும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து திமுக கேள்வி எழுப்பியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிகொண்டு வரப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உட்படப் பலரும் பேசினார்.












Click it and Unblock the Notifications