சூடுபிடிக்கும் ஜெயலலிதா மரண வழக்கு.. முதல்முறையாக நாளை விசாரணைக்கு ஆஜராகிறார் ஓ.பி.எஸ்!
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக விசாரணைக்கு ஆஜராகிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் கடந்த 2016 டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலர் குற்றம்சாட்டினர்.
பஞ்ச் பேசிய பன்னீர்செல்வம்.. ஆறு கடலில் கலக்கும்..கடல் ஆற்றில் கலக்காது.. ஐ.பெரியசாமிக்கு பதிலடி..!
எடப்பாடி அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம்
இது தொடர்பாக விசாரிக்க நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு ஜெயலலிதாவின் உறவினர்கள், மருத்துவர்கள், பாதுகாவலர்கள், அரசு அதிகாரிகள் என 150 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
2 ஆண்டுகள் தடைபட்ட விசாரணை
இதனிடையே மருத்துவர்களை விசாரிக்கையில் மருத்துவ வல்லுநர்கள் குழு உடன் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை தடைபட்டது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி
2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை பெற்றுத் தருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகும் திமுக தலைவர்கள் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை தொடரும் என பேசி வந்தனர்.
2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விசாரணை
இந்த நிலையில், 2 ஆண்டுகள் கழித்து அண்மையில் மீண்டும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தொடங்கியது. விசாரணையை தொடர்வது குறித்து அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் சசிகலா தரப்பு வழக்கறிஞர்களுடன் நீதியரசர் ஆறுமுகசாமி ஆலோசனை நடத்தினார். அவர்கள் வழங்கிய பரிந்துரையை தொடர்ந்து விசாரணை மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது
ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மார்ச் 21 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இதற்கு முன் 8 முறை ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக நாளை காலை 11:30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகிறார்.
இதேபோல் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியிடமும் நாளை காலை 10 மணிக்கு ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துகிறது.