அரசியலில் ’சவுக்கு’ சங்கர்! ‘அந்த’ கட்சியில் சேரப் போறாரா? கிளம்பிய யூகங்கள்.. அவரே சொல்லிட்டாரே!
சென்னை : பிரபல பத்திரிகையாளரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர் பாஜக அல்லது நாம் தமிழர் கட்சியில் இணைந்து உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடுவாரா என கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் அந்த கேள்விகளுக்கு சவுக்கு சங்கரே பதிலளித்துள்ளார்.
பிரபல பத்திரிகையாளரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதோடு, இது தொடர்பாக சில யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து இருந்தார்.
இது தொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.
திருவாரூரோ திருவள்ளூரோ.. உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன்.. சவுக்கு சங்கர் அதிரடி
சவுக்கு சங்கர்
இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது விசாரணைக்கு ஆஜரான சவுக்கு சங்கர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என கூறியதோடு, தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனால் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலுார் சிறை
இந்நிலையில் சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடந்த 16ம் தேதி, கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 14 ஆண்டுகளாக தற்காலிக பணிநீக்கத்தில் இருந்த அவரை, பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை கடந்த 24ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வேறு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்குகளில் இருந்தும் ஜாமீன் கிடைத்த நிலையில், அவர் கடலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு சிறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தொடர்ந்து பல்வேறு யூடியூப் சேனல்களில் தெரிவித்து வருகிறார். அப்போதுதான் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என கூறி இருந்தார். இதை அடுத்து பத்திரிக்கையாளராக இருந்த சவுக்கு சங்கர் அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார். இது தொடர்பான விவாதங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின்
அவர் பாஜக அல்லது நாம் தமிழர் கட்சியில் இணைந்து உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடுவாரா எனவும் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் அந்த கேள்விகளுக்கு சவுக்கு சங்கரே பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்," உதயநிதி ஸ்டாலின் அதிகார மையமாக இருக்கிறார். அவரை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அதனை செய்யவில்லை .அதனால் ஜனநாயக நாட்டில் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அவர் எங்கு போட்டியிட்டாலும் நான் எதிர்த்துப் போட்டியிடுவேன். உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து எந்த கட்சியின் வேட்பாளர் போட்டியிட்டாலும் அவர் வெற்றி பெறுவது கடினம்.
கட்சியில் இல்லை
பாஜக நாம் தமிழர் அதிமுக மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் என்னை பொது வேட்பாளராக கூட நிறுத்தலாம். எந்த கட்சிக்கும் ஒரு எம்எல்ஏ இல்லாவிட்டால் பெரிய பிரச்சனை இல்லை. அதே நேரத்தில் உதயநிதியை எதிர்க்கிறேன் என்பதற்காக அனைத்து கட்சிகளும் போட்டியிடாமல் விலகிக் கொண்டால் போட்டி எனக்கும் அவருக்கும் மட்டும் தான் இருக்கும். உதயநிதியை எதிர்த்துப் போட்டியிடுவதாலும் திமுகவை விமர்சித்து வருவதாலும் பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து தேர்தலை சந்திப்பீர்களா எனவும் கேட்கிறார்கள். தற்போதைக்கு எந்த கட்சியிலும் இணையும் திட்டம் இல்லை. என்னைப் பொருத்தவரை அரசியல் கட்சிகளில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன் எனக் கூறியிருக்கிறார். இதன் மூலம் நாம் தமிழர், பாஜக கட்சிகளில் சேர்வாரா என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.