நேற்று தான் கடிதம் எழுதினார் முக ஸ்டாலின்.. உடனே அதிகரித்து கொடுத்த மோடி.. நடந்த நல்லது!
சென்னை: தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்தார். கடிதம் எழுதிய மறுநாளே தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 210 மெட்ரிக் டன்னிலிருந்து 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு.
முதல்வர் முக ஸ்டாலின் கேட்ட உடனேயே பிரதமர் மோடி ஆக்சிஜன் ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு அதிகரித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்!
எனினும் முக ஸ்டாலின் கேட்டது 510 மெட்ரிக் டன் என்கிற நிலையில் 419 மெட்ரிக் டன் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருப்பதை, சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுப்பப்படுகிறது.
வடமாநிலங்கள்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறி வருகின்றன, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், ஹரியானா, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம் என பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் பாஜக ஆளாத மாநிலங்கள் என எல்லா மாநிலங்களுக்குமே கேட்ட ஆக்ஸிஜனை மத்திய அரசு அப்படியே ஒதுக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
குறிப்பாக டெல்லி, கர்நாடகா மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தின் படிக்கட்டை தட்டி தங்களுக்கு வேண்டிய ஆக்ஸிஜனை ஒதுக்கக்கோரி போராடி வருகின்றன. ஆனாலும் கேட்ட ஆக்ஸிஜனை மத்திய அரசால் உடனே ஒதுக்க முடியாத சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 210 மெட்ரிக் டன்னிலிருந்து 419 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
மோசமான நிலை இல்லை
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களின் ஆக்ஸிஜன் தேவை சுமார் 1000 மெட்ரிக் டன்னிற்கு மேல் தேவை என்கிற நிலை உருவாகி உள்ளது. தமிழகம் அந்த அளவிற்கு மோசமான நிலையை எட்டவில்லை. எனினும் அடுத்த இருவாரங்களுக்குள் 800 மெட்ரிக் டன் அளவிற்கு தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் என்பதை ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தமிழகத்தின் ஆக்ஸிஜன் தேவையை 419 மெட்ரிக் டன்னில் இருந்து விரைவாகவே தமிழகம் கேட்கும் அளவை ஒதுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
ஆக்ஸிஜன் அளவு
தற்போதைய நிலையில் ஈரோட்டில் இருந்து செயல்பட கூடிய national oxygen limited நிறுவனத்தில் இருந்து 38 மெட்ரிக் டன் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. சேலத்தில் உள்ள jsw steel limited நிறுவனத்தில் இருந்து 15 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு கொடுக்கப்பட கூடிய ஒதுக்கீடானது 210 மெட்ரிக் டன்னிலிருந்து 419ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.