என்ன தலைவரே இப்படி முதல் பேச்சிலேயே சறுக்கிட்டீங்களே!
திடீரென கமல்ஹாசனுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் கே.எஸ்.அழகிரி
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தனது முதல் பேச்சிலேயே சொதப்பியுள்ளார். கமல்ஹாசனுக்கு நேற்று அழைப்பு விடுத்துப் பேசிய அவர் இன்று கமல்ஹாசனை கண்டிப்பதாக கூறி பல்டி அடித்து மக்களின் நகைப்புக்கு ஆளாகியுள்ளார்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமலுக்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இடையேயான விரிசல் வளர்ந்து எல்லை மீறி போய்விட்டது. ஆனால் காங்கிரஸ் மீது கமலுக்கு நன்மதிப்பு உள்ளது.
குறிப்பாக ராகுல் மீது. அதனால்தான் திமுகவுடன் மறைமுகமாகவாவது காங்கிரசுடன் கமல் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டு அதிலுமே ஏமாற்றமே மிஞ்சியது.

மதச்சார்பற்ற கொள்கை
ராகுல் மீது கமல் வைத்துள்ள அபரிமிதமான மதிப்பா, அல்லது கமல் மீதே தனக்கு உள்ள அபிமானமோ தெரியவில்லை, புதிதாக மாநில காங்கிரஸ் பொறுப்பேற்ற கே.எஸ்.அழகிரி "கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும். அவர் மதச்சார்பற்ற கொள்கை உடையவர். அவர் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற வாக்குகள்தான் சிதறும்" என்று பேசினார்.

ஏன் கூப்பிடணும்?
கூட்டணிக்குள் இருக்கும் ஒருவர், அதிலும் உறுதிப்படுத்தப்பட்ட கூட்டணி தலைவர் இப்படி பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. அழகிரி பேச்சினால் திமுக தலைமை அதிர்ந்ததாகவும் கூறப்பட்டது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசனும், "கமல்ஹாசன்தான் தெளிவா சொல்லிட்டாரே, அவரை அழகிரி ஏன் கூட்டணிக்கு கூப்பிடணும்" என்று கேட்டிருந்தார்.

தடாலடி பேட்டி
கூடிக்கொண்டே போகும் கூட்டணி தலைவர்களின் அதிருப்தி பேச்சோ என்னவோ தெரியவில்லை, திடீரென்று அழகிரி கமலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார். "திமுகவை கமல்ஹாசன் தேவையில்லாமல் விமர்சித்துள்ளார்" என்று தடாலடி பேட்டி தந்துள்ளார்.

பாய்ச்சல்
அதுமட்டுமல்லாமல், கூட்டணியில் இடம்பெற வேண்டிய கட்சிகளை திமுக - காங்கிரஸ் சேர்ந்து முடிவு செய்யும் என்று உஷாராக தெரிவித்து உள்ளார். எதற்காக இந்த திடீர் மாற்றம் என தெரியவில்லை. சும்மா இருக்கிற கமலஹாசனை கூட்டணிக்கு கூப்பிட்டுவிட்டு, திரும்பவும் அவர் மீதே பாய்வது ஒரு கட்சியின் மூத்த தலைவரான அழகிரிக்கு இது அழகா என தெரியவில்லை?

ஓவர்நைட் மாற்றம்
அத்துடன் அழகிரி விடவில்லை, "திமுக மீதான கமலின் விமர்சனம் பாஜகவிற்கு உதவும்" என்றும் சொல்கிறார். அதாவது கமல் ஒரு பாஜக அபிமானி, பாஜகவின் நிழல் போன்ற எண்ணத்தை வெளிப்படுத்தும்படி சந்தடி சாக்கில் சொல்லி இருக்கிறார். கண்ணுக்கும், கருத்துக்கும் சரியாக தெரிந்தவர் ஓவர்நைட்டில் எதிரியாக தெரிவது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

ஏன் இந்த குழப்பம்?
தலைவர்கள் எந்த அளவுக்கு அப்டேட் ஆக இருக்க வேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது. கமல்ஹாசன் குறித்த புரிதலும் அழகிரிக்கு இல்லை, திமுக கூட்டணி குறித்த நிலவரமும் அழகிரிக்கு தெரியவில்லை என்பதையே இது உணர்த்துகிறது. இல்லாவிட்டால் நேற்று அழைத்திருக்க மாட்டார்.. இன்று அப்படியே நேர் மாறாக பேசி குழம்பியிருக்க மாட்டார்.

யோசித்து பேச வேண்டும்
அரைகுறையாக மேம்பாோக்காக எதையாவது பேசினால் கடைசியில் கே.எஸ். அழகிரி போல தர்மசங்கடப்பட வேண்டியதுதான். திமுகவின் கோபத்தை குறைப்பதாக நினைத்து, கூட்டணி கட்சிகளின் அதிருப்தியை போக்குவதாக நினைத்து, கடைசியில் அழகிரி விமர்சனத்துக்கு ஆளானதுதான் மிச்சம். அதனால் யார், எதை பேசினாலும் யோசித்து தெளிவாக பேச வேண்டும் என்பதையும் அழகிரி சமாச்சாரம் நிரூபித்துள்ளது.












Click it and Unblock the Notifications