சமூக நீதிக்காக மாநிலங்கள்தோறும் பல ஸ்டாலின்கள் போராட வேண்டும்: கி.வீரமணி
சென்னை: சமூக நீதி எனும் உரிமையை நிலைநாட்ட மாநிலங்கள்தோறும் பல மு.க.ஸ்டாலின் போராட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
Recommended Video
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27% இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகளில் திமுக, தமிழக அரசும் இணைந்து கொண்டு வாதாடியது.
அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வட இந்திய ஊடகங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஏ.ஐ.பி.சி.எப், எஸ்.ஆர்.ஏ உள்ளிட்ட பல அமைப்புகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா மற்றும் சமூக நீதிக்கான ஒருங்கிணைந்த தேசிய திட்டம் (2022-2024) என்ற தலைப்பில் இன்று இணையவழி கருத்தரங்கை நடத்தின.
மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்யனுமா? சுற்றறிக்கை அனுப்பிய யுஜிசிக்கு கி.வீரமணி கண்டனம்
வென்றது எப்படி? வில்சன் எம்.பி
இக்கருத்தரங்கின் தொடக்கத்தில் சமூகநீதிக்குத் திமுகவின் பங்களிப்பு குறித்த சிறப்புக் காணொளி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக ராஜ்யசபா எம்.பி. வில்சன் பேசுகையில், எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இடங்களை ஓபிசி பிரிவினர் இழப்பதை அறிந்தபோது மு.க. ஸ்டாலின் மக்கள் மன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என மும்முனைகளில் அதற்கெதிராகப் போராட முடிவெடுத்தார். உச்சநீதிமன்றத்தில் இந்த இட ஒதுக்கீட்டுக்காகப் பொதுநல வழக்கு போட்ட முதல் அரசியல் கட்சி திமுகதான். நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய ஒன்றிய அரசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக. மதிப்பெண் மட்டுமே தகுதியைத் தீர்மானிப்பது இல்லை என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் நான் கூறிய வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர் என்றார்.
முன்னெடுத்து செல்லப்படும் சமூக நீதி வரலாறு
அமெரிக்காவை சேர்ந்த லீட் அமைப்பின் தலைவர் ஹரி எப்பனபள்ளி பேசுகையில், மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றத்தில் உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி பாராட்டத்தக்கது என்றார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரையாற்றுகையில், தொடர் போராட்டங்கள் மூலமாக வரலாற்றுச் சிறப்புமிகு சாதனையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படைத்துள்ளார். அவருக்கு நமது பாராட்டுகள். இணையற்ற தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. திராவிடப் பெருந்தலைவர்களின் பண்புநலன்களை அவர் தன்னகத்தே கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்கிறார்.
ஸ்டாலின் இல்லை எனில் சாத்தியம் இல்லை
அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்கும் அரசியல்வாதியாக இல்லாமல் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கும் தலைவராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளார். திராவிட இயக்கத் தலைவர்களின் மரபுத் தொடர்ச்சியாக விளங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநீதியைக் காப்பதற்காக சமரசங்கள் அற்ற போராட்டத்தை நடத்தி வருகிறார். மு.க. ஸ்டாலின் மட்டும் இல்லையென்றால் இந்த 27% இட ஒதுக்கீடு சாத்தியம் ஆகியிருக்காது. மு.க. ஸ்டாலினின் அறிவுரை மற்றும் வழிகாட்டலின்படி வில்சன் சிறப்பாக வாதங்களை எடுத்து வைத்தார். அவர்களைப் பாராட்டவே கூடியிருக்கிறோம்.
ஸ்டாலின்கள் போராட வேண்டும்
இந்தியாவிலேயே முதன்முறையாக எந்தத் துறையிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்பட்டிருப்பதை ஆய்வு செய்யக் கூடிய வகையில் குழு ஒன்றை அமைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இது இந்தியாவுக்கே வழிகாட்டியாகும். இதைப் பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். நாம் அடைந்துள்ளவை மிகக் குறைவு. கட்சி எல்லைகளைக் கடந்து நாம் ஓர் இயக்கமாக அணி திரள வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் பல ஸ்டாலின்கள் சமூகநீதிக்காகப் போராட வேண்டும். திராவிட முன்மாதிரியின் அடிப்படையில் சமூகநீதிக்கான நாடு தழுவிய இயக்கத்தை அனைவரும் இணைந்து கட்டமைக்க வேண்டிய தருணம் இது என்றார்.