"காடுவெட்டியார்" .. புயலென டிவிட்டரை தாக்கிய டிரெண்டிங்.. பிறந்த நாளில் முட்டி மோதும் பாமக!
மாவீரன்காடுவெட்டியார் என்ற ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது
சென்னை: இன்று திடீரென "மாவீரன் காடுவெட்டியார்" என்று ட்விட்டரில் செம ட்ரெண்டாக போய் கொண்டிருக்கிறது.. தேர்தல் நெருங்கும் சமயத்தில், பாமக கூட்டணியில் இழுபறியில் உள்ள சமயத்தில், இப்படி ஒரு காரியத்தை ட்ரெண்டாக்கியது யார் என்ற கேள்வியும் எழுகிறது.
டாக்டர் ராமதாசின் வலது கரமாகவும், வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர் காடுவெட்டி குரு.. வட மாவட்டங்களில் மிகப்பெரிய கட்சியான பாமகவின் மிக முக்கியமான தலைவராக இருந்தவர். தன்னுடைய அதிரடியான பேச்சுகளால் வன்னிய இளைஞர்களையே கட்டுக்குள் வைத்திருந்தவர் குரு..
பாமக கூட்டங்கள் எங்கு நடந்தாலும் சரி, அந்த கூட்டங்களில் ராமதாஸ், அன்புமணி போன்றோர் பங்கேற்றிருந்தாலும் சரி, அவர்களின் பேச்சுகளைவிட குருவின் பேச்சுக்கு கைதட்டல்களும், ஆரவாரங்களும் பெருகும். அப்படிப்பட்டவர் திடீரென சில வருடங்களுக்குள் இறந்துவிடவும், பாமக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
வன்னியர் இடஒதுக்கீடு: தமிழக அரசுடனான பிப்.3 பேச்சுவார்த்தையில் பாமக பங்கேற்பு
பிரச்சனைகள்
ஒருமுறை டாக்டர் ராமதாஸ் பேசும்போது, "எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையையும் தாண்டிய பெருஞ்சோகம் காடுவெட்டி குருவின் மறைவு தான்" என்று ராமதாஸ் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். குருவுக்காக மணிமண்டபம் காடுவெட்டியில் கட்டப்பட்டதையும் நாம் மறுக்க முடியாது. ஆனால், இந்த மரணத்திற்கு பிறகு எத்தனையோ சலசலப்புகள், அதிருப்திகள் பாமக தரப்பில் குருவின் ஆதரவாளர்களுக்கு இருந்து வருகிறது. அதேசமயம் குடும்ப பிரச்சனையும் குரு குடும்பத்தில் இருந்து வருகிறது... கடந்த வருடம் வெட்டு குத்து வரை போய்விட்டது..
ஆதரவாளர்கள்
ஒருகட்டத்தில் குருவின் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர், வாழ்வுரிமை கட்சி வேல்முருகனுக்கு ஆதரவை தர ஆரம்பித்துவிட்டனர்.. குருவின் குடும்பத்தினருக்கும் வேல்முருகன் ஆதரவாக இருந்து வருகிறார்.. வன்னிய ஓட்டுக்களை பெற்று தருவது உட்பட திமுகவுக்கு முழு சப்போர்ட்டையும் வேல்முருகன் தந்து கொண்டிருக்கிறார்.. இந்நிலையில் திடீரென மாவீரன் காடுவெட்டியார் என்று ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
விசுவாசிகள்
இன்று காடுவெட்டியாரின் பிறந்த நாள் ஆகும். இதைத்தான் டிவிட்டரில் அவரது ஆதவாளர்கள், விசுவாசிகள், உறவினர்கள், பாமகவினர், வன்னியர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் நினைவு கூர்ந்து போஸ்ட் போட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாமக - அதிமுக கூட்டணி உடன்பாடு எட்டப்படாத நிலையில், மாவீரர்காடுவெட்டியார் என்ற பெயரில் டிரெண்டாகி வருகிறது.. இதில், வாழ்க காடுவெட்டியார், குருவின் புகழ் ஓங்குக என்ற வாசகங்களை ட்விட்டர்வாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
எதிர்பார்ப்பு
அதேசமயம், வன்னியர் ஓட்டுக்களை இந்த முறை தேர்தலில் அள்ள போவது யார் என்ற எதிர்பார்ப்பையும் இந்த ட்விட்டர் டிரெண்டிங் ஏற்படுத்தி வருகிறது. பாமகவை பொறுத்தவரை, வடமாவட்டங்களில் செல்வாக்கை பெற்றுள்ளது.. வன்னியர்களுக்கு ஆதரவாக இப்போதும் இடஒதுக்கீட்டை முன்னிறுத்தி, கூட்டணியும் பேசி முடிக்க முடியாமல் அதிமுக தலைமையுடன் போராடி கொண்டிருக்கிறது.. இதுபோக இதே ஒதுக்கீட்டை முன்னிறுத்தி பல கட்ட போராட்டங்களையும் ராமதாஸ் மேற்கொண்டு, அச்சமூக வாக்குகளை அப்படியே தக்கவைத்து கொண்டிருக்கிறார்.
வடமாவட்டம்
திமுகவை பொறுத்தவரை, வடமாவட்டங்களில் வன்னியர் ஓட்டுக்களை ஓரளவு பெற்றுள்ளது.. அதாவது பாமகவுடன் கூட்டணி வைக்கவே தேவையில்லாத அளவுக்கு, தாங்களே வடமாவட்டங்களில் வலுவாகி விட்டனர்.. இதுபோக துரைமுருகன், ஜெகத்ரட்சகன் போன்ற ஜாம்பவான்களும் கட்சியில் உள்ளனர்.. எல்லாவற்றிற்கும் மேலாக வேல்முருகன், காடுவெட்டி ஆதரவாளர்களின் வாக்குகளை லட்டுபோல, திமுக பக்கம் திருப்பி விடவும் செய்வார்.
திமுக?
இதில், காடுவெட்டி குருவின் ஆதரவும் பெருகினால் அது மேலும் கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.. அந்த வகையில், குருவின் ஆதரவாளர்கள் மற்றும் வன்னிய ஓட்டுக்களை அள்ள போவது யார்? திமுகவா? பாமகவா? பொறுத்திருந்து பார்ப்போம்.