ஆன்மீகவகுப்பு என கல்லா கட்டிய நித்யானந்தா? ஆப்பிரிக்காவில் ஒரு மாவட்டத்தையே.. கோமாவெல்லாம் டிராமாவா?
சென்னை : பாலியல் பலாத்காரம், கடத்தல்,மோசடி உள்ளிட்ட புகார்கள் சிக்கி தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்யானந்தா, கோமா நிலையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மத்திய ஆப்பிரிக்க நாடான கானாவில் உள்ள ஒரு மாவட்டத்துடன் கைலாசா, இரு நாட்டு உறவை மேம்படுத்துவதற்காக திட்டங்கள் தொடக்க நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்னுமே புரியலே உலகத்திலே என்ற ரீதியில் தான் இருக்கிறது சாமியார் நித்யானந்தா மற்றும் அவரது கைலாசா குறித்த தகவல். நித்யானந்தாவும், கைலாசாவும் இருக்குதா இல்லையா , நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் அவரது பக்தர்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.
சாமியார் நித்யானந்தா
இதுகுறித்து நித்யானந்தா தனது கைப்பட எழுதிய கடிதத்தோடு வெளியிட்ட பதிவில், நான் இறக்கவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். 27 டாக்டர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என கூறியிருந்தார். அதன்பிறகு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் என்னால் உணவு சாப்பிட முடியவில்லை. எனக்கு தூக்கம் வரவில்லை என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது.
ஆன்மீக வகுப்புகள்
அதனையும் மறுத்த நித்தியானந்தா பரமசிவனை சந்தித்துவிட்டு வருவதாகவும் அதன் பிறகு ஆன்மீக வகுப்புகள் எடுப்பேன் என கூறியிருந்தார். இது ஒரு மோசடித் திட்டம் என நித்தியானந்தாவுக்கு நன்கு தெரிந்தவர்கள் கூறியிருந்தனர். ஒவ்வொரு முறை பணத்தேவை ஏற்படும் போதெல்லாம் தான் சமாதி நிலைக்குச் சென்று பரமசிவனை சந்தித்ததாகவும் நித்தியானந்தா அதனை வைத்து பக்தர்களை ஏமாற்றி பணம் பறிப்பது வழக்கம் தான் என கூறியிருந்தனர்.
குழப்பத்தில் பக்தர்கள்
இந்நிலையில் கைலாவில் நித்யானந்தாவின் சிலை போன்ற உருவங்களை வைத்து பூஜை நடத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அவர் சாமாதியில் இருந்து வந்துவிட்டாரா அல்லது இன்னும் அதில் தான் இருக்கிறாரா என குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் உள்ள ஒரு மாவட்டத்துடன் கனெக்ட் ஆகியிருக்கிறது கைலாசா. அதாவது இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஃப்ரிக்க நாட்டுடன் கைலாசா
எஃப்புட்டு (Effutu) மாவட்டம் கானாவின் மத்திய பிராந்தியத்தில் உள்ள இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். முதலில் இது 1988இல் அப்போதைய பெரிய எஃபுட்டு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த நிலையில், 29 பிப்ரவரி 2008 அன்று ஜனாதிபதி ஜான் அக்யெகும் குஃபூரின் ஆணையால் மாவட்டம் பிரிக்கப்பட்டு முனிசிபல் மாவட்ட சட்டமன்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. இதன் நகராட்சி மத்திய பிராந்தியத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. அதன் தலைநகராக வின்னேபா உள்ளது. இதனுடன் தான் கைலாசா புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது.
தெரியும் விரைவில் தெரியும்
அதன்படி எஃப்புட்டு மற்றும் ஸ்ரீகைலாசா இடையே இறையாண்மை , பண்டைய அறிவொளி நாகரீக தேசம், இந்துக்களின் முதல் தேசமான கைலாசாவுடன் இருதரப்பு உறவுகளில் மேப்ம்படுத்துவது, கலாச்சார புரிதல், மத சுதந்திரம் மற்றும் பிற உரிமைகள், பசியை ஒழித்தல்,முழுமையான சுகாதாரம் மற்றும் கல்வி, குடிமக்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான பரிமாற்றங்கள், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு ஆகியவற்றில் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்கள் தொடக்க நிலையில் உள்ளது. இதன் காரணமாக கைலாசா எங்கிருக்கிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.