நிஜத்தை சந்திக்க 3 ஆண்டுகள் கழித்து சென்ற "நிழல்".. கருணாநிதி குடும்பத்தில் ஒருவர்!
சென்னை: கருணாநிதியின் நிழலாக இருந்த நேர்முக உதவியாளர் சண்முகநாதன், அவர் மறைந்ததும் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது 3 ஆண்டுகள் கழித்து இன்று காலமானார். இதன் மூலம் நிஜத்தை சந்திக்க நிழல் சென்றதாகவே கருதப்படுகிறது.
கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்தவர் கோ சண்முகநாதன். இவரை உதவியாளராக மட்டும் அல்ல , அவரது குடும்பத்தில் ஒருவராகவே பார்த்தார் கருணாநிதி. அதுபோல் முதல்வர் ஸ்டாலினும் அப்படியே உறவை வளர்த்தார்.
இவ்வளவு ஏன் சண்முகநாதன் உடல்நலம் குன்றி இருந்த போது வீட்டுக்கு சென்று நேரில் பார்த்த போது "எப்படி இருக்கீங்க"ன்னு என கேட்டதும் முதல்வர் ஸ்டாலினின் கைகளை பற்றிக் கொண்ட சண்முகநாதன் கண்கலங்கினாராம். அது போல் ஸ்டாலினின் மகன் உதயநிதியும் கடந்த ஜூன் 3ஆம் தேதி மருத்துவமனையில் சண்முகநாதனை நேரில் போய் சந்தித்தார்.

முக்கியத்துவம்
இப்படி கருணாநிதி குடும்பத்தில் முக்கியத்துவம் பெற்ற சண்முகநாதன், கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு காலமானதை அடுத்து வயோதிகம் காரணமாக சண்முகநாதனுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவ்வப்போது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இன்று காலமானார்.

எழுத்தர்
சண்முகநாதன் முன்னதாக காவல் துறையில் எழுத்தராக இருந்தவர். இவர் வழக்கு குறித்த கோப்புகளில் வழக்கு விவரங்களை எழுதுபவர். சுருக்கெழுத்து தெரிந்த அவர் கருணாநிதியின் பொது கூட்டங்களுக்கு செல்வார். அப்போது அவரது பேச்சுகளை எத்தனை மணி நேரமாக இருந்தாலும் எத்தனை நீளமான பேச்சாக இருந்தாலும் சரி உடனுக்குடன் குறிப்புகளை எடுக்கும் ஆற்றல் கொண்டவர் சண்முகநாதன்.

சண்முகநாதன்
அவரை ஒரு சில கூட்டங்களில் பார்த்த கருணாநிதி, அவரது குறிப்பெடுக்கும் திறனை கண்டு வியந்தார். இதையடுத்து திருவாரூர் தென்னனிடம் கருணாநிதி " எனது கூட்டங்களில் ஒருவர் குறிப்பெழுதுவாரே அவரை அழைத்து வாருங்கள்" என தெரிவித்துள்ளார். கருணாநிதியை போல சண்முகநாதனும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

மிஸ் செய்யாதவர்
இதையடுத்து 1969 ஆம் ஆண்டு கருணாநிதி மக்கள் நலத் துறை அமைச்சராக பொறுப்போற்றார். அப்போது தனக்கு நேர்முக உதவியாளராக இணைந்து கொள்ளுமாறு சண்முகநாதனிடம் கேட்க, அதற்கு அவரும் உடனே இணைந்தார். அன்று முதல் கருணாநிதி இருந்த வரை அவர் பேசும் எந்த ஒரு வார்த்தையையும் விடாமல் குறிப்பெடுத்து வந்தார்.

செய்திக் குறிப்புகள்
பத்திரிகைகளுக்கான அறிக்கைகள், செய்திக் குறிப்புகள், கருணாநிதியின் பொதுக் கூட்ட பேச்சுகள் என அனைத்தையும் அவர் வாசிக்க சண்முகநாதன் குறிப்பெடுத்துக் கொள்வார். கடந்த 2001 ஆம் ஆண்டு தலைமை செயலகத்தில் இணை செயலாளராக பணியிலிருந்து சண்முகநாதன் ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து கருணாநிதியின் உதவியாளராக இருந்தார். கருணாநிதி குறித்து அனைத்தையும் தெரிந்த ஒருவர் சண்முகநாதன். அவர் கண் அசைவிற்கு ஏற்ப சண்முகநாதன் செயல்படுவார்.
Recommended Video

நிஜத்தை தேடி நிழல்
கருணாநிதி என்ன மனநிலையில் இருக்கிறார் என அவரது மகன்கள், மகள்கள் சண்முகநாதனை கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் போய் தங்களுக்கு தேவையானதை கேட்பார்களாம். கருணாநிதி பேசும் போது எதையாவது தேடினால் அவர் எதை தேடுகிறார் என்பதும் சண்முகநாதன் தெரிந்து கொண்டு அதை எடுத்துக் கொடுப்பாராம். கூட்டணி பேச்சுவார்த்தையின் போதும் முக்கிய தலைவர்களை கருணாநிதி சந்திக்கும் போதும் அவருடனேயே இருந்தவர் சண்முகநாதன். கருணாநிதி இறந்த போது மிகவும் உடைந்து போன சண்முகநாதன், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்தாராம். சுமார் 50 ஆண்டுகள் கருணாநிதியுடனே நிழலாக இருந்த சண்முகநாதன், இன்று தனது நிஜத்தை தேடி செல்கிறார்!












Click it and Unblock the Notifications