கும்பகோணம் ஆணவக்கொலை.. காதலில் கெளரவம் பார்க்க வேண்டாம்; ஆணவமும் அவசியமில்லை - கமல்ஹாசன்
தமிழகத்தை உலுக்கிய கும்பகோணம் ஆணவக்கொலை சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
சென்னை: வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை என்றும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே துளுக்கவெளி பகுதியை சேர்ந்த சரண்யா,24 திருவண்ணாமலையை மாவட்டத்தை சேர்ந்த மோகன்,31 என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் சரண்யாவின் காதல் அவரது வீட்டுக்கு தெரிய வரவே அவரது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சரண்யாவின் சகோதரரான சக்திவேல் தனது மைத்துனர் ரஞ்சித் என்பதற்கு சரண்யாவை திருமணம் முடிக்க ஏற்பாடுகள் செய்து உள்ளார்.

காதல் திருமணம்
இதனை அறிந்த சரண்யா கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சரண்யா மோகனுடன் திருமணம் செய்துகொண்டு சென்னையில் இருந்துள்ளார். இந் நிலையில் புதுமண தம்பதிகளை விருந்துக்கு அழைப்பதாக கூறி அவரது சகோதரர் சக்திவேல் வரவழைத்துள்ளார். இதனை நம்பி சரண்யா மற்றும் மோகன் இருவரும் வீட்டிற்கு வந்து உள்ளனர்.

வெட்டிக்கொலை
அப்போது புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் இருவரும் தண்ணீர் கொடுத்துள்ளனர். தண்ணீரை வாங்கி தம்பதிகள் குடித்த போது அவரது சகோதரர் சக்திவேல் மற்றும் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும் புதுமண தம்பதிகளை வெட்டி கொலை செய்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொலையாளிகள் சரண்
இக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த சோழப்புரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெண்ணின் சகோதர் சக்திவேல் மற்றும் மைத்துனர் ரஞ்சித் இருவரும் கும்பகோணம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

கமல்ஹாசன் கண்டனம்
தமிழகத்தை உலுக்கிய இந்த சம்வத்திற்கு பலரும் கண்டனம் தெரவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அதில் கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச்சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது.

காதலித்தால் கொல்வதா?
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை என்று மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications