கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர்...முற்போக்கு சக்திகள் கவனம் - கமல்ஹாசன்
சென்னை: ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது எனறு கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்பூர் அரசு பியூ கல்லூரியில், ஹிஜாப் அணிந்துவந்த 6 இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாப் அணிவது அரசியலமைப்புச் சட்டம் எங்களுக்கு வழங்கிய உரிமை, எங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் எனக்கூறி அந்த 6 மாணவிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் உடுப்பி மாவட்டத்தில் தொடங்கிய இந்த சர்ச்சை அடுத்தடுத்து சிக்மகளூர், விஜயபுரா, ஷிமோகா, பத்ராவதி என சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்குப் பரவியது. அங்கும் கல்லூரி நிர்வாகத்தால் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது.
கைமீறி போகுது! கும்பலாக கதவை திறந்து! இஸ்லாமிய மாணவிகளின் வகுப்பிற்குள் நுழைந்த இந்துத்துவா கும்பல்
ஹிஜாப் விவகாரம்
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் அவர்களுக்கு எதிராக நாங்களும் காவி அணிவோம் என்றுகூறி இந்து மாணவிகள் கழுத்தில் காவி துண்டுடன் ஜெய் ஶ்ரீராம் என்று முழக்கமிட்டு கல்லூரிக்கு வரவே இந்த விவகாரம் பற்றிப்பரவியது. எங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறி மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகா அரசு உத்தரவு
இதனையடுத்து மாணவர்களும் மாணவிகளும் ஒரே மாதிரியாக சீருடை அணிய வேண்டும் என்று கர்நாடகா மாநில அரசு தெரிவித்துள்ளது. காவி துண்டு மாணவர்களுக்கு எதிராகவும், போராடும் இஸ்லாமிய மாணவர்களுக்கு ஆதரவாகவும் கழுத்தில் நீலத் துண்டுடன் சில மாணவர்களும் ஜெய்பீம் முழக்கத்துடன் சில மாணவிகள் கல்லூரிக்கு வருகை தந்தனர். இதனால் படிக்கும் மாணவர்களுக்குகிடையே மத மோதல்கள் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது ஹிஜாப் அணியும் பெண்களின் வாதம். ஹிஜாப் விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. கர்நாடகாவில் ஹிஜாப், காவித்துண்டு சர்ச்சை பெரிதாக வெடிக்கவே, ஒரு கல்லூரியில் தேசியக்கொடியை இறக்கிவிட்டு காவிக்கொடியை மாணவர்கள் ஏற்றியது சர்ச்சையை அதிகரித்தது. மாணவ, மாணவிகள் இடையே மத மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கலக்கத்தைத் தூண்டுகிறது
இந்த நிலையில் கர்நாடகாவில் நடைபெற்று வரும் சம்பவம் குறித்து பல அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கவனமாக இருக்க வேண்டிய காலம்
கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது என்று கமல் தெரிவித்துள்ளார். முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.