வருங்கால முதல்வரே வருக... வருக... கமல் அலுவலகத்தில் ஒலித்த வரவேற்பு முழக்கம்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை வருங்கால முதல்வரே வருக வருக என அந்த கட்சித் தொண்டர்கள் ஓங்கி உரக்க முழக்கமிட்டு கட்சி அலுவலகத்திற்கு வரவேற்றனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
கூட்டம் 11.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 12.00 மணிக்கு தான் அவர் அலுவலகமே வந்தார். அதன் பின்பு தனது அறைக்கு சென்றுவிட்டு 12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க வந்தார்.

மெதுவாக நடை
கமல்ஹாசனின் காலில் வைக்கப்பட்டிருந்த பிளேட் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதற்கு பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் வீட்டில் முழு ஓய்வில் இருந்துவந்தார். அவ்வப்போது அறிக்கைகள் மூலம் தனது கருத்தை பதிவு செய்து வந்தார். இந்நிலையில் இன்று கட்சி அலுவலகம் வந்த கமல் ஊன்றுகோல் உதவியுடன் மிகவும் மெதுவாக தாங்கி தாங்கி நடந்தார்.

குடியுரிமை மசோதா
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் இன்று அது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரை பார்த்த தொண்டர்கள், நீண்ட ஆயுளுக்கு வாழவேண்டும் என்றும், தமிழகத்தை ஆள வேண்டும் எனவும் வாழ்த்துக்கோஷம் எழுப்பினர்.

வேதனை
கமலின் உடல்நிலை தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் மிக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் நாம் விசாரித்த போது, கமல் சாருக்கு காலில் பயங்கரமான வலி உள்ளது. அறுவைச் சிகிச்சைக்கு பின்பு அவர் வலியால் அதிகம் அவதிப்படுகிறார். இருப்பினும் பிஸியோதெரபி உள்ளிட்ட பயிற்சிகள் மூலம் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார் என பதில் கிடைத்தது.

மைக் கோளாறு
மேலும், செய்தியாளர்களை மறைத்துக்கொண்டு ம.நீ.ம. தொண்டர்கள் நின்றதால், அவர்களை ஓரமாக நிற்க வைக்க சினேகன் படாதபாடு பட்டார். கமல் பேசிக்கொண்டிருக்கும் போது இரண்டு மைக்குகளில் பழுது ஏற்பட்டு மூன்றாவது மைக்கில் அவர் பேசினார். வழக்கமாக அரைமணி நேரத்துக்கும் அதிகமாக செய்தியாளர்களுடன் உரையாடக்கூடிய கமல் இன்று 15 நிமிடத்தில் தனது சந்திப்பை முடித்துக்கொண்டார்.












Click it and Unblock the Notifications