அநியாயமா இருக்கு? மார்க்சிஸ்ட் எம்பி “டுவிஸ்ட்”.. கோபத்தில் கொந்தளித்த கனிமொழி - EWS FLASHBACK
சென்னை: பொருளாதாரத்தில் பின் தங்கி உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த சூழலில் இந்த மசோதா நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்படும்போது திமுக எம்.பி. கனிமொழி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை சற்று பின்னோக்கி பார்ப்போம்.
இந்தியாவில் சாதி ஏற்றத்தாழ்வு முறை பல நூறு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த சாதிய இழிவை அடியோடு ஒழித்து சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள், சிறுபான்மையினர் என்று பிரிக்கப்பட்ட தரப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய மாநில அரசுகள் இடஒதுக்கீட்டை வழங்கி வருகின்றன.

உயர்சாதியினர்
இட ஒதுக்கீட்டின் காரணமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர் நன்றாக படித்து நல்ல பணிகளுக்கு சென்று இருக்கிறார்கள். இந்த இடஒதுக்கீட்டை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வந்த உயர்சாதியினர், தங்கள் சமுதாயத்திலும் ஏழைகள் இருப்பதால் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினர்.

10% இடஒதுக்கீடு
அதே நேரம் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு திராவிட, அம்பேத்கரிய இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், நாடாளுமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகள் முன்பாக உயர்சாதி ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது.

திமுக வழக்கு
EWS எனப்படும் இந்த இடஒதுக்கீட்டிற்காக அரசியலமைப்பின் 103 வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்தம் இடஒதுக்கீடு வரம்பு 50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறிவிட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பில் இடமில்லை என திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முந்தினம் 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

மாநிலங்களவை
இந்த சட்டம் மாநிலங்களவையில் விவாதத்திற்கு வரும்போது திமுக எம்பி கனிமொழி 10% இட ஒதுக்கீட்டிற்கு எதிராக விரிவான உரையை நிகழ்த்தினார். அவரை தொடர்ந்து பேசிய திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்பி டி.கே.ரங்கராஜன் உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை ஆதரித்து பேசத் தொடங்கினார்.

கனிமொழி வாக்குவாதம்
அவருக்கு அருகே அமர்ந்து இருந்த கனிமொழி, டி.கே.ரங்கராஜன் பேசுவதை கேட்டு ஆத்திரமடைந்தார். உடனே அவர் எழுந்து சென்று,
"இது நியாயமா? என்ன அநியாயம் இது? நீங்கள் எப்படி இதை ஆதரிக்கலாம் என்று பேசினார்." ஆதங்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், கனிமொழி சொல்வதை காதில் வாங்காமல் ரங்கராஜன் பேசிக்கொண்டே சென்றார்.

ரங்கராஜன் விளக்கம்
இந்த வீடியோ அந்த சமயத்தில் சமூக வலைதளத்தில் பரவியது. தமிழ்நாட்டில் கனிமொழிக்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கனிமொழியொடு சென்னையில் ஒன்றாக பேச்சியளித்த ரங்கராஜன் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் 10% இடஒதுக்கீட்டை ஆதரித்துள்ளன. திமுக உள்ளிட்ட 2 கட்சிகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தன. கனிமொழி இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசிய அனைத்தும் உண்மை. ஆனால், பிற மாநிலங்களில் நிலை வேறு." என்றார்.












Click it and Unblock the Notifications