“கூட்டம் கடுமையாக அதிகரித்தும் பிரச்சாரத்தை நிறுத்தாதது ஏன்?" தவெகவுக்கு நீதிபதி சரமாரி கேள்வி!
கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், தவெக தரப்புக்கு நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். "கூட்டம் அளவை கடந்ததும் ஏன் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தவெக தலைவர் விஜய்யின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரை கரூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். போலீசார், அரசு தரப்பு வாதங்களை முன்வைத்தது.

கைது செய்யவேண்டும் என போலீஸ் வாதம்
இந்த வழக்கு விசாரணையில், காவல்துறை அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியதாகவும், 41 உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கலாம் எனவும் கூறி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வாதிட்டது. "போலீஸ் தரப்பு, விஜய் கூட்டத்திற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தவெகவினர் நிபந்தனைகளை மீறினர்," என்று வாதிட்டது.
பின்னர், தவெக தரப்பு, "ஒரு நபர் ஆணைய அறிக்கை வரும் வரை யாரையும் கைது செய்யக்கூடாது. விஜய் பிரச்சாரத்திற்கு வந்தது தானாக வந்த கூட்டம், வண்டி வைத்து அழைத்து வரவில்லை. 10,000 பேர் வருவார்கள் என காவல்துறையிடம் கூறினோம், ஏனெனில் சம்பள நாள் என்பதால் குறைவாக வருவார்கள் என்று கணித்தோம்" என்று வாதிட்டது.
ஆதவ் அர்ஜுனா மறுத்தார்
காவல்துறை தரப்போ, "உழவர் சந்தை பகுதியில் பொறியாளர்களை அழைத்து ஆய்வு செய்தோம். 23 ஆம் தேதி லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அனுமதி தருவதாக போலீஸ் கூறியது. கூட்டம் அளவை கடந்ததும், பேருந்தை முன்பாக நிறுத்தி பேசச் சொல்லி கூறினோம், ஆனால் ஆதவ் அர்ஜுனா மறுத்தார்" என்று தெரிவித்தது. "கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம், மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான்" என்று தவெக தரப்பு வாதிட்டது.
3 இடமுமே போதாது
நீதிமன்ற நீதிபதி பரத் குமார், தவெக தரப்புக்கு சரமாரியாக கேள்விகள் எழுப்பினார். "விஜய் கூட்டத்திற்கு 10,000 பேர் வருவார்கள் என எப்படி கூறினீர்கள்? சம்பள நாள், வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நாள் என்பதால் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணித்தீர்கள்? உங்கள் கட்சித் தலைவரை முதலமைச்சர் அல்லது மற்ற தலைவர்களுடன் ஒப்பிட வேண்டாம். அவர் டாப் ஸ்டார், பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள். நீங்கள் கோரிய 3 இடமுமே பொருத்தமற்றது. அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?" என்று கேள்வி எழுப்பினார்.
ஏன் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை
"கூட்டம் அளவை கடந்ததும் நிர்வாகிகள் ஏன் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு போலீஸ் தரப்பில், "விஜய் சொன்ன நேரத்திற்கு வராததால் நெரிசல் ஏற்பட்டது. 3 மணிக்கே வந்திருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கும். தவெக நிர்வாகிகள் போலீசார் சொல்வதை கேட்வில்லை. போலீஸ் கூறியதை மீறி ராங் ரூட்டில் சென்றனர். இது உயிரிழப்பு ஏற்பட முக்கிய காரணம்." எனத் தெரிவித்தனர்.
மேலும், "அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார், அப்போதே நிராகரிக்க வேண்டியது தானே? பரப்புரை நடைபெறும் இடத்திற்கு விஜய் வேண்டுமென்றே காலதாமதமாக வந்துள்ளார். 20 நிமிடத்தில் வர வேண்டிய வாகனத்தை 2 மணி நேரமாக கடக்க வேண்டும் என்றே தாமதம் செய்துள்ளார். மேலும், கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே பலர் மயங்கிய நிலையில், ஆம்புலன்ஸ் வாகனத்தை தவெக தொண்டர்கள் வழிமறித்து தாக்கினர்" என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் ஆவணங்களின் அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க போவதில்லை எனக் கூறிய நீதிபதி, மனசாட்சிப்படி தான் உத்தரவு பிறப்பிப்பேன் எனக் கூறி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications