ஏன் மறைக்கிறீங்க?.. ஆளுநர் அனுப்பிய நீட் ஆவணங்களை தைரியமாக காட்டுங்கள்!.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி
சென்னை: ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆவணங்களை வெளியுலகிற்கு காட்டுவதில் ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி கடந்த சில மாதங்களுக்கு சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
அந்த மசோதா மீது 100 நாட்களுக்கு மேல் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்றைய தினம் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலகுமாறு சமூகவலைதளங்களில் #GetoutRavi என்ற ஹேஷ்டேக் டிரென்டானது.
நீட் தேர்வு எதிர்ப்பில் அதிமுக ஒரே முடிவு... ஆளுநர் தன் பணியை செய்துள்ளார் - ஓபிஎஸ் கருத்து
மாணவர்கள் நலன்
ஆளுநர் அனுப்பிய செய்திக் குறிப்பில் "அந்த மசோதா மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது . குறிப்பாக மாநிலத்தின் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என ஆளுநர் கருதுகிறார். பிப்ரவரி 1ஆம் தேதியே தமிழக சட்டப்பேரவை சபாநாயகரிடம் அந்த மசோதாவை திருப்பி அனுப்பி அதை பேரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிமுக
இந்த நிலையில் பாஜகவும் அதிமுகவும் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியான நடவடிக்கை என்றனர். நீட் விலக்கு குறித்து முடிவெடுக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக தவிர அழைப்பு விடுத்த கட்சிகள் கலந்து கொண்டன.
கடமை
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் தனது கடமையை செய்யவில்லை என்றார். மேலும் இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நூற்றாண்டுகாலப் போராட்டத்தின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் திறக்கப்பட்ட கல்விக் கதவுகளை மூடுவதற்கான அத்தனை முயற்சிகளும் வெவ்வேறும் வடிவங்களில் வருகின்றன. அதில் நீட் தேர்வும் ஒன்று. எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்கொண்டு #NEET-க்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்! என தெரிவித்திருந்தார்.
ரீட்வீட் செய்த குஷ்பு
இந்த ட்வீட்டை ரீவிட் செய்த குஷ்பு சுந்தர், ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளை தைரியமாக காட்டினால் பாராட்டுக்குரியவராக இருப்பீர்கள். ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளை காட்டுவதற்கு ஏன் நீங்களும் (முதல்வர்) உங்கள் அரசும் மறைக்கிறீர்கள்? உலகிற்கு அந்த கோப்புகளை காட்ட எது உங்களை தடுக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நிர்வாகிகள் கேள்வி
ஆளுநர் அனுப்பிய டாக்குமென்ட்களை ஏன் இன்னும் வெளியிடவில்லை? என பாஜக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே போல் தமிழக அலங்கார ஊர்தி நிராகரித்த போது கூட மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை வெளியிடாதது ஏன் என தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழக அரசை கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.