மர்ம முடிச்சு அவிழுமா? ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை! அடுத்த கட்டத்திற்கு செல்லுமா?
சென்னை : அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் இன்று மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்ற நிலையில், வழக்கு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்ட திமுக முக்கிய பிரமுகரும், கழக தலைமை நிலைய செயலரும் , தற்போதைய நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியான தொழிலதிபர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலை நடந்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
கல்லூரி வளாகத்தில் மாணவி தொழுகை.. கிளம்பிய எதிர்ப்பு.. பறந்து வந்த அதிரடி உத்தரவு! அதிரும் குஜராத்
ராமஜெயம் கொலை
இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கை தற்போது சிறப்பு புலனாய்வு குழு போலீசார் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே வழக்கு தொடர்பாக சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்காக அழைத்து செல்லும் நபர்களை துன்புறுத்துவதாக, சிறை கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தார். அதில் இந்த குழு சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை கண்காணித்து மனித உரிமை மீறலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரவுடிகளிடம் விசாரணை
இதற்கு இடையே தமிழக போலிசார் டிஜிபி உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் பிரபல ரவுடிகளில் முக்கியமான ரவுடிகளிடம் மிகவும் ரகசியமான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை விசாரணை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ள 20 நபர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் டிஜிபி ஷகில் அக்தர் முன்பு ஆஜராகினர்.
உண்மை கண்டறியும் சோதனை
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பிரபல ரவுடிகள் சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து , சீர்காழி சத்தியராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், மயிலாடுதுறை கலைவாணன் என 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்யப்படுகிறது.
இன்று சோதனை
அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் இன்று மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது. டெல்லியில் இருந்து வருகை தந்துள்ள தடயவியல் துறை நிபுணர்கள் இந்த சோதனையை நடத்தினர். அதில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்,இதன் மூலம் விசாரணை அடுத்த கட்டத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக போலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.