கிடைத்தது கிரீன் சிக்னல்.. கோடநாடு வழக்கில் திடீர் திருப்பம்.. புது தனிப்படை அமைப்பு: யாருக்கு குறி?
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விசாரணை நடத்துவதற்காக புதிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா இருக்கிறது. இங்கு 2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொடூரமான சம்பவத்தில் பாதுகாவலர் ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் சயான், மனோஜ், கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதில் கனகராஜ் விபத்தில் மர்மமான முறையில் பலியாகிவிட்ட நிலையில் சயான், மனோஜ் உள்ளிட்ட 10 பேரின் வாக்குமூலங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

வாக்குமூலம்
இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் சயான் கொடுத்த வாக்குமூலம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சயான் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் மீண்டும் போலீசார் புதிதாக வாக்குமூலம் பெற்று வருகிறார்கள். இந்த புதிய வாக்குமூலங்களால் வழக்கில் பெரிய அளவில் திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு போலீஸ் விசாரணையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து சயான் வாக்குமூலம் அளித்தததாகவும், சில முக்கியமான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

வழக்கு
இந்த வழக்கை ஊட்டி நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீலகிரி போலீசார் இந்த வழக்கில் சயான் உள்ளிட்டவர்களிடம் மீண்டும் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள். இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனிப்படை
காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இந்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வழக்கில் புதிய ஆதாரங்களை திரட்டுவதற்காகவும் கூடுதல் வாக்குமூலங்களை பெற வேண்டும் என்றும் இந்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதனால் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்த தமிழ்நாடு போலீசுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது.

விசாரணை
இந்த உத்தரவை தொடர்ந்தே தற்போது இதில் தனிப்பட்ட வகையிலும் வேகமாகவும் விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை கோடநாடு வழக்கில் மட்டும் இனி கவனம் செலுத்தும். இதனால் இதில் இனி பலர் சிக்க வாய்ப்புகள் உள்ளது. பலருக்கு குறி வைக்கப்படலாம், வழக்கு விசாரணை வேகமாக நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி
இந்த தனிப்படை யாரை குறி வைத்து விசாரணையை நகர்த்தி செல்லும்.. அடுத்து யாரிடம் வாக்குமூலம் வாங்கும் என்பதே கேள்வியாக உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ் ஏற்கனவே பலியாகிவிட்டார். அதேபோல் வழக்கோடு தொடர்புடைய மேலும் 4 பேர் உட்பட மொத்தம் 6 பேர் இதில் மர்மமாக பலியாகி உள்ளனர். இதனால் தனிப்படை போலீசார் இந்த மர்ம மரணங்கள் குறித்து விசாரிக்கும், அது தொடர்பான ஆவணங்களை திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications