பொறியாளர்கள் சம்பளத்தில் அரசு கை வைக்கக்கூடாது... கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தல்..!
சென்னை: அரசு பொறியாளர்கள் ஊதியத்தை குறைக்கக் கூடாது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
பொறியாளர்களின் ஊதியத்தில் கைவைப்பது சரியான நிர்வாகத்திற்கு அழகல்ல என அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அக்கறையின்மை
தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றிவரும் பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதிய விகிதத்தை குறைப்பது மிகவும் தவறான நடவடிக்கை. இது சரியான நிர்வாகத்திற்கான அழகல்ல. தமிழக முதலமைச்சரின் கையில் இருக்கும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் பொறியாளர்களுக்கு இப்படியொரு நிலைமையை ஏற்படுத்தியிருப்பது அத்துறையின் மீது தமிழக முதலமைச்சருக்குள்ள அக்கறையின்மையை வெளிக்காட்டுகிறது.

ஏற்க இயலாது
அரசாங்கமாக இருந்தாலும், தனியாராக இருந்தாலும் அதில் எந்தவொரு பணியிலும் பணியாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வை எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால் தமிழக அரசின் நடவடிக்கை அதற்கு மாறாக இருக்கிறது. ஏற்கனவே வழங்கிய ஊதியத்தை குறைத்தால் அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இரவு பகல் பார்க்காமல்
பொறியாளர்கள் ஒரு தேசத்தை வடிவமைக்கின்ற சிற்பிகள். தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அனைத்து கட்டமைப்புகளுமே பொறியாளர்களால் உருவானது. சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், அணைகள், குடிநீர் வசதிகள், மின்சாரம், கழிவுநீர் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துமே நம் அரசு துறை பொறியாளர்களால் உருவாக்கப்பட்டது. சுனாமி, புயல் போன்ற பேரிடர் காலங்களிலும் பொறியாளர்களுடைய மீட்புப்பணிகள் மறக்க முடியாதவை. இரவு பகல் பார்க்காமல் மக்களுடைய நலனுக்காக அரசின் திட்டங்களை நிறைவேற்றுபவர்கள் பொறியாளர்கள்.

புத்திசாலிதனமல்ல
அவர்களுடைய சம்பளத்தை குறைப்பதன் மூலம் அவர்கள் மனவேதனை அடைந்து பணிகளில் சுணக்கம் காட்டினால் தமிழக மக்களுக்கு தான் இழப்பு. பொறியாளர்களுடைய திறமையால் ஒரு திட்டத்தினுடைய செலவை குறைத்து அரசு நிதியை மிச்சப்படுத்த முடியும். அப்படிப்பட்ட அரசு துறை பொறியாளர்களை ஊக்குவித்து அரசின் செலவினங்களை குறைத்து சரியான கால அவகாசத்தில் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் ஒரு அரசினுடைய புத்திசாலித்தனமாக இருக்கும்.

ஒரே கண்ணோட்டம்
மாநில அரசில் பொறியாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அரசு துறைகளில் பணியாற்றும் உதவிப்பொறியாளர்கள் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசின் பொதுப்பணித்துறையில் உள்ள பொறியாளர்களுக்கும், மாநில அரசின் பொதுப்பணித்துறையில் உள்ள பொறியாளர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. இருவரையும் ஒரே கண்ணோட்டத்தில் தமிழக அரசு பார்க்க கூடாது.












Click it and Unblock the Notifications