திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்! அதிமுக மீது கடும் விமர்சனம்
சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் அதிமுகவிலிருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
அதிமுக இரு அணிகளாக பிளவுப்பட்டு ஓபிஎஸ் தலைமையில் ஓரணியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியுமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் கோவை செல்வராஜ்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு தொடர்ந்து பதிலடிகளை கொடுத்து வந்தார். இந்த நிலையில் அந்த அணிக்கு மிகவும் வலிமையான நிர்வாகியாக இருந்த கோவை செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

கட்சி பணிகளில் இருந்து விலகினேன்
இதுகுறித்து அவர் சேனல்களுக்கு அளித்த பேட்டியில் நான் கடந்த சில மாதங்களாகவே கட்சி பணிகளில் ஈடுபடாமல் விலகியே இருந்தேன். அப்போது ஓபிஎஸ் என்னிடம் வந்து நீங்கள் வகிக்கும் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை வேறு யாருக்காவது கொடுத்துவிடவா என கேட்டார். அதற்கு நான் தாராளமாக கொடுத்துவிடுங்கள். இனி உங்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்றேன்.

ஓபிஎஸ்ஸும் வைத்திலிங்கமும் கூட்டு
ஓபிஎஸ்ஸும் வைத்திலிங்கமும் அதிமுகவை அழித்து வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவி கொடுத்து வருகிறார்கள். இதனால் நிறைய பேருக்கு அவர்கள் மீது அதிருப்தி நிலவுகிறது. ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சுயநலத்திற்காக அதிமுகவை பிளவுப்படுத்துகிறார்கள். அவர்களுடன் பயணிக்க நான் விரும்பவில்லை. எனவே கட்சியிலிருந்து நானாகவே விலகுகிறேன். என்னை யாரும் நீக்கவில்லை. தமிழகம் முழுவதும் எனது ஆதரவாளர்களை சந்தித்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார்.

புகழேந்தி சமாதான பேச்சு
இந்த நிலையில் ஓபிஎஸ் அறிவுறுத்தலின்படி பெங்களூர் புகழேந்தி, கோவை செல்வராஜுடன் சமாதான பேச்சு நடத்தி வந்ததாக கூறப்பட்டது. எனினும் அதில் உடன்பாடு எட்டவில்லை. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் அண்ணா அறிவாலயத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் கோவை செல்வராஜ் வருகை தந்தார். அங்கு இன்றைய தினம் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த கோவை செல்வராஜ் அக்கட்சியில் இணைந்தார்.

ஆறுமுகசாமி ஆணையம்
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில் தமிழக மக்களையும் தமிழகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை முதல்வர் ஸ்டாலினை தவிர வேறு யாருக்குமே இல்லை. ஆறுமுகசாமி ஆணையத்தினால் நான் அதிமுகவில் தொடரவில்லை. அதனால் நான் விலகுகிறேன் என கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி அளித்திருந்தார். அண்மையில் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரான கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டியும் திமுகவில் இணைந்தார்.

ஆறுகுட்டி
அவர் தனது விலகலுக்கான காரணத்தில் கூறியதாவது, எனது கவுண்டம்பாளையம் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் நிறைய நலத்திட்டங்களை செய்திருந்தார். இதற்காக நான் சட்டசபையில் அவரை பாராட்டினேன். அன்று முதல் ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் என்னை ஓரங்கட்ட தொடங்கினர். மேலும் என்னை அழைக்காமல் ஒரு ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினர். இதற்கு காரணம் கேட்டும் ஓபிஎஸ் சரியான பதிலை தரவில்லை. அதனால் நான் விலகிவிட்டேன் என்றார்.

தோப்பு வெங்கடாச்சலம்
அது போல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தோப்பு வெங்கடாசலமும் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் அவர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இப்படியாக பலர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து வருகிறார்கள். கொங்கு மாவட்டத்தில் அதிருப்தியில் இருக்கும் அதிமுக உள்ளிட்ட கட்சியினரை கொத்தாக திமுகவில் இணைக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications