இந்த மனுஷனைப் போய் தோற்கடிச்சுட்டோமே.. தீரா வருத்தத்தில் கோவில்பட்டி!
சென்னை: சில நேரங்களில் நாம் செய்த செயலை நினைத்து வருத்தப்படுவோம்.. சே.. தப்புப் பண்ணிட்டோமே.. இதைச் செய்திருக்கலாமே என்று வருந்துவோம்.. அப்படி ஒரு வருத்தத்தை கோவில்பட்டி மக்கள் பலரிடமும் பார்க்க முடிகிறது.
ஏன் கோவில்பட்டி மக்கள் வருந்துகிறார்கள்.. அப்படி என்ன தப்பு செய்து விட்டார்கள்.. சாதா தப்பு செய்யலை சார், நிச்சயமா நாங்க செய்தது பெரிய தப்புதான் என்பதே கோவில்பட்டியைச் சேர்ந்த பலரின் ஆதங்கமாக உள்ளது.
8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு
இப்படி கோவில்பட்டி மக்கள் வருத்தப்பட யார் காரணம் தெரியுமா.. சீனிவாசன்தான். யார் இந்த சீனிவாசன்.. எதற்காக இவரை நினைத்து மக்கள் வருந்த வேண்டும்.. அதுக்கு நாம கோவில்பட்டிக்கு போக வேண்டும்.. வாங்க போகலாம்.
சிம்பிள் சீனிவாசன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் சீனிவாசன். வழக்கமான கம்யூனிஸ்ட் தோழர்கள் போலத்தான் இவரும்.. ரொம்ப எளிமை.. எளிதாக எவராலும் அணுக முடியும். அதை விட முக்கியமாக இவர் வீட்டில் இருக்கும் நேரத்தை விட மக்களோடு மக்களாக இருக்கும் நேரம்தான் மிக மிக அதிகம். நீளமான ஜிப்பாவும், ஜோல்ணாப் பையும்தான் இவரது அடையாளம்.
பண பலத்தால் தோல்வி
சட்டசபைத் தேர்தலில் கோவில்பட்டியில் இவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து இரு பெரும் பண பலங்கள் மோதின. ஒருவர் கடம்பூர் ராஜு இன்னொருவர் டிடிவி தினகரன்.. எப்படி ஜெயிக்க முடியும்.. பண பலங்களுக்கு முன்னால் வெறும் மக்களை மட்டுமே நம்பி களம் கண்ட சீனிவாசனுக்கு 3வது இடமே கிடைத்தது. ஜெயித்த பிறகுதான் உண்மையான மக்கள் பிரதிநிதி யார் என்பதை மக்கள் காணும் வாய்ப்பு கிடைத்தது.
காணாமல் போன கடம்பூர் ராஜு
ஜெயித்த கடம்பூர் ராஜுவை தொகுதியில் எங்குமே காண முடியவில்லை என்று சொல்கிறார்கள். 2வது இடத்தைப் பெற்ற தினகரனோ சுத்தமாக இந்தத் தொகுதியை மறந்து விட்டார். இப்போது தொகுதி முழுக்க அலைந்து திரிந்து கொரோனா காலத்து நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்காக ஓடியாடி வருபவர் சீனிவாசன்தான். அவர்தான் தன்னுடன் சில தோழர்களை சேர்த்துக் கொண்டு மக்களுக்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்து வருகிறார்.
எளிமையான உதவி
5 கிலோ அரிசிப் பைகளை வாங்கி வைத்துக் கொள்கிறார். இல்லாதவர்களும், சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் தவிப்போருக்கும் தேடித் தேடிப் போய் கொடுத்து வருகிறார். இவர்கள் எல்லாம் எத்தனை நாள் உயிருடன் இருக்கப் போகிறார்கள்னே தெரியலங்கை. ஏதோ என்னால் ஆன உதவி.. இருக்கும் வரைக்குமாவது சாப்பிட்டுக்கட்டுமே என்று எதார்த்தமாக பேசுகிறார் சீனிவாசன்.
நெகிழ்ச்சியில் மக்கள்
சீனிவாசன் செய்து வரும் இந்த பெரிய உதவியால் மக்கள் நெகிழ்ந்து போயுள்ளனர். இந்த மனுஷனுக்கு ஓட்டுப் போடாமல் விட்டு விட்டோமே என்று அவர்கள் வருந்துகிறார்களாம்.. இவர்தான் உண்மையான மக்கள் பிரதிநிதி. நமக்காக ஓடி வருபவர் இவர்தான். இவரை தோற்கடித்து விட்டோமே என்ற வருத்தம் பலரிடம் தென்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.
நல்ல மனமே வெல்லும்
பணமும், செல்வாக்கும் எப்போதும் உடன் இருக்காது . வேலை முடிந்ததும் காலியாகி விடும். கூடவே இருப்பது நல்ல மனசு மட்டுமே என்பதை சீனிவாசன்கள் நிரூபித்தபடிதான் இருக்கின்றனர். ஆனால் புரிந்து கொள்வதற்குத்தான் நமது மனங்கள் தயாராக இல்லை. கோவில்பட்டி ஒரு சிறு உதாரணம்தான். இதேபோல ஏகப்பட்ட சீனிவாசன்கள்.. ஒவ்வொரு தொகுதியிலும் மக்களுக்காக சூறாவளி போல சுற்றிக் கொண்டுதான் உள்ளனர்.