தமிழகத்தில் பல்கி பெருகும் கொரோனா.. இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடல்
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதை தடுக்க இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரே நாளில் மாநிலத்தில் 39 பேர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார்கள். தமிழகத்தில் தற்போது 65,635 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே நாளில் மட்டும் 1,00,804 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக 2884 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் 9.80 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எங்கே செல்லும் இந்த பாதை.. இந்தியாவில் இன்று 2,61,500 பேருக்கு கொரோனா..உயிரிழப்பும் புதிய உச்சம்!
ஊரடங்கு
இரண்டாவது அலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, 15 நாட்கள் முழு ஊரடங்கு, வார இறுதியில் ஊரடங்கு என கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
50 சதவீதம்
இந்த நிலையில் தமிழகத்தில் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், ஹோட்டல்கள், தேனீர் கடைகள் உள்ளிட்ட இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் கோயம்பேடு சந்தையில் சில்லறை வியாபார கடைகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தை
இந்த நிலையில் நேற்றைய தினம் கொரோனா பாதிப்பு 9ஆயிரத்தை தாண்டியதால் கோயம்பேடு சந்தையை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 ஆவது மற்றும் 4ஆவது ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது.
கோயம்பேடு சந்தை மூடல்
தற்போது இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியது. இதனால் கோயம்பேடு வியாபாரிகளு்ம பொதுமக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.