பன்வாரிலால் போட்ட “குண்டு”.. அவருக்கு எதிராக வீசிய அதிமுக! எடப்பாடி அரசு மீது புதிய புகார் -பின்னணி
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, முன்னாள் அமைச்சர்கள் மீதான நெடுஞ்சாலைத்துறை மோசடி, டெண்டர் முறைகேடு, குட்கா ஊழல் என பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்திற்கு கோடிக்கணக்கில் பணம் பெறப்பட்டதாக தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியது புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு மீதான அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக அரசுக்கு எதிராக அமைந்து இருக்கிறது. இதுமட்டுமின்றி நெடுஞ்சாலைத்துறை மோசடி, டெண்டர் முறைகேடு, குட்கா மோசடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஆளுநரும், எடப்பாடி ஆட்சிகாலத்தில் தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்தவருமான பன்வாரிலால் புரோகித், "தமிழ்நாட்டின் ஆளுநராக நான் இருந்தபோது பல்கலைக்கழகங்களுக்கு 27 துணைவேந்தர்களை நியமித்தேன். அங்கு ரூ.40 முதல் ரூ.50 கோடிக்கு விற்பனை செய்யும் சூழல் இருந்தது என்றார்.

கேபி அன்பழகன் விளக்கம்
இந்த நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், "தமிழகத்தில் ஆளுநராக இருந்தபோது, துணை வேந்தர் நியமனத்திற்கு கோடிக் கணக்கில் பணம் வாங்குகிறார்கள் என பன்வாரிலால் புரோகி இதே போன்ற ஒரு விழாவில் பேசினார். நான் அப்போதே இவரது கருத்துக்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்து உள்ளேன். ஒரு துணை வேந்தரை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியானவுடன் தேடுதல் குழு அமைக்கப்படுகிறது.

பஞ்சாப் விவகாரம்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவிக்கு 40 கோடி முதல் 50 கோடி வரை விற்கப்படுகிறது என்று பன்வாரிலால் புரோகித் சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. பஞ்சாப் மாநிலத்தில் தற்போது துணை வேந்தர்களை நியமிக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை என்பதால் தமிழ்நாட்டின் மீது குறை கூறுவது ஏற்புடையது அல்ல.

ஆளுநரே பொறுப்பு
துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது. அதில் எந்த வித தவறுகள் நடந்திருந்தாலும் அதற்கு ஆளுநரே முழு பொறுப்பு. இதில் ஆளும் அரசுக்கோ முதலமைச்சருக்கோ, உயர்கல்வித்துறை அமைச்சருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை. ஒருவேளை அவ்வாறு பணம் கை மாறி இருந்தால் அது ஆளுநரையை சாரும்.

தவறான தகவல்
மேலும் 22 துணை வேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்தேன் என்று அவர் சொல்கிறார். இதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பது தெரிகிறது. அரசு தலையிட்டு பட்டியல் கொடுத்து இருந்தால் அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். அவர் கூறுவது தவறான தகவல்." என்றார். இதன் மூலம் பன்வாரிலால் புரோகித் தங்களுக்கு எதிராக வீசிய குண்டை அவர் மீது திருப்பி வீசியுள்ளது அதிமுக.












Click it and Unblock the Notifications