கே.பி.முனுசாமியை முன்வைத்து எடப்பாடியின் ’ஆபரேஷன் ஓபிஎஸ்’
Recommended Video
சென்னை: முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியை முன்வைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்களை ஒரேயடியாக தம் பக்கம் வளைப்பதில் முதல்வர் எடப்பாடியார் தரப்பு படுதீவிரமாக இருக்கிறதாம்.
ஓபிஎஸ் தர்மயுத்தத்தைத் தொடங்கிய போது அந்த அணியின் தளபதியாக இருந்தவர் கேபி முனுசாமி. சசிகலா குடும்பத்தால் அரசியலில் ஓரம்கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தார்.
ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம், சசிகலா குடும்பத்தின் மீதான கோபத்தை வெளிக்காட்ட கேபி முனுசாமிக்கு பயன்பட்டது. பின்னர் ஓபிஎஸ், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அணியுடன் இணைந்தார்.
ராஜ்யசபா சீட்... கோகுல இந்திராவுக்காக 'விவிவிஐபி' டாக்டர் பரிந்துரை- அதிமுக ஷாக்
ஓரம்கட்டப்பட்ட முனுசாமி
அப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும் சமமாகவே நடந்து கொண்டார் முனுசாமி. ஆனாலும் மேற்கு மண்டல அமைச்சர்கள் அவரை மதிக்காமலேயே இருந்து வந்தனர். முதல்வரை சந்திக்க சென்றால் திட்டமிட்டே காத்திருக்க வைப்பது என்பது உள்ளிட்ட அவமானங்களை எதிர்கொண்டார் முனுசாமி.
ஈபிஎஸ் அணியில் முனுசாமி
இது குறித்து முதல்வரிடமே நேரில் முறையிட்டு எனக்கு சசிகலாதான் பிடிக்காதவர்.. நீங்கள் இல்லையே என வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதன்பின்னர் முதல்வர் எடப்பாடி தரப்பு, கேபிமுனுசாமியை அரவணைத்துக் கொண்டது. லோக்சபா தேர்தலில் கேபி முனுசாமிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அத்துடன் முனுசாமி வெற்றி பெற்றால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கிக் கொடுப்பது என வாக்குறுதி கொடுத்திருந்தாராம் முதல்வர். முனுசாமி வென்றிருந்தால் அவர்தான் இப்போது அதிமுக சார்பில் மத்திய அமைச்சராக பதவியேற்றிருப்பாராம்.
ராஜ்யசபா சீட் கேட்கும் முனுசாமி
ஆனால் லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்ததால் இப்போது ராஜ்யசபா சீட் கேட்டுக் கொண்டிருக்கிறார் முனுசாமி. தமக்கு ஆதரவாக கேபி முனுசாமி இருப்பார் என முதல்வர் நம்புவதால் அவருக்கு வாய்ப்பு இருக்கிறது.
ஓபிஎஸ் ஆபரேஷன்
அதே நேரத்தில் ஓபிஎஸ் அணியில் இருந்து வந்த கேபி முனுசாமியை ராஜ்யசபா எம்.பியாக்கினால் இதை முன்வைத்தே ஓபிஎஸ் பக்கம் இனி எவரும் செல்லாத வகையில், உங்களுக்கும் ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை விதைக்க நினைக்கிறதாம் முதல்வர் தரப்பு. இந்த ஆபரேஷன் ஓபிஎஸ் தமது தலைமைக்கு கை கொடுக்கும் என்பதும் முதல்வர் தரப்பின் நம்பிக்கையாம்.
நடவடிக்கைகள் தீவிரம்
மேலும் ராஜ்யசபா சீட்டுக்கு தம்மை தேடித்தான் அனைவரும் வருகின்றனர். தம்மிடம் பரிந்துரையும் கொடுக்கிறார்கள். இது அதிமுகவின் தலைவராக நம்மையே அனைவரும் கருதுகின்றனர். இதனால் தைரியமாக சில முடிவுகளை எடுக்கலாம் எனவும் கணக்குப் போடுகிறதாம் முதல்வர் தரப்பு. இதனடிப்படையில் கட்சியில் சில மாற்றங்களை முதலில் செய்வது; எதிர்ப்பே இல்லாத நிலையில் அடுத்தடுத்த மாற்றங்களை நடைமுறைப்படுத்தலாம் என்பதுதான் முதல்வரின் திட்டமாம். முதல்வர் தரப்பின் இந்த காய்நகர்த்தல்களை ஓபிஸை நம்பி போன நத்தம் விஸ்வநாதன் போன்றவர்கள் மிகவும் அமைதியாகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகின்றனர் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.