அப்படி போடுங்க.. 5 மாநகராட்சி தேவை! எல்.முருகனிடன் வலியுறுத்திய பாஜக தலைகள்.. அசையுமா “இரட்டை இலை”
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதிமுகவிடம் எத்தனை சீட்டுகளை கேட்டுப் பெறுவது என்பது குறித்து மத்திய அமைச்சர் எல் முருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதற்காக நேற்று முதல் வேட்புமனு துவங்கியுள்ளது. வேட்புமனு அளிக்க 4ம் தேதி இறுதி நாள் என அறிவிக்கபட்டது குறுகிய காலங்களே உள்ளதால் ஆளும் கட்சி - எதிர் கட்சி என இரு பெரும் கட்சிகளும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு தங்களது வெற்றிக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக - பாஜக கூட்டணி
அதிமுக சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக அக்கட்சியினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில், பாஜகவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் வேட்பாளர் தேர்வு குறித்தும் அதிமுகவுடன் எத்தனை சீட்டுகளை கேட்டுப் பெறுவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கூட்டணி கட்சிகளிடம் கேட்டுப் பெறுவது குறித்து நேற்று மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை குறித்தும் திட்டங்களை வகுத்து வருவதாக தகவல் வெளியான நிலையில் மாவட்ட தலைவர்களுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன் ,சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் கூட்டத்திற்கு பின்னர் அதிமுகவுடன் இடப்பகிர்வு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பாஜக குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

எல்.முருகன் ஆலோசனை
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் எத்தனை இடங்களை கேட்டுப் பெறுவது. குறிபாக மாநகராட்சிகளை கைப்பற்றுவது என்பது குறித்து மத்திய அமைச்சர் முருகன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றுள்ளது. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக அலுவலகம் செல்ல உள்ள நிலையில் இந்தக் கூட்டமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வலுத்த கோரிக்கை
ஆலோசனைக் கூட்டத்தில் 3 அல்லது 5 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை கேட்டுப் பெற வேண்டும் எனவும், 138 மாநகராட்சிகளில் குறைந்தது 20 நகராட்சிகளையும் கேட்டுப் பெற வேண்டும் என ஆலோசனையில் வலியுறுத்தப்பட்டதாகவும், இதுகுறித்து அதிமுகவுடன் பேச்சு நடத்தி உரிய இடங்களை பெற்று தர நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதிமுக பாஜக இடையேயான பங்கீடு குறித்து இன்று பட்டியல் இறுதி செய்யப்படலாம் எனவும், அதிகபட்சமாக நாளைக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications