ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தீரன் சின்னமலை... நினைவை போற்றி வணங்கிய தலைவர்கள்..!
சென்னை: ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து மறைந்த தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் அவரது திருவுருவப் படத்துக்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''ஓடாநிலையில் கோட்டை அமைத்துப் போரிட்ட விடுதலை வீரர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
சங்ககிரிக் கோட்டையில் ஆடிப்பெருக்கு நாளில் வீர மரணம் அடைந்த தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாளான இன்று சென்னையில் கலைஞர் நிறுவிய தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன்.'' எனக் கூறியிருக்கிறார்.
இதேபோல் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள நினைவு தினச் செய்தியில்; ''ஆங்கிலேய அரசுக்கு எதிராக போரிட்டு வெற்றிகள் பல கண்டு அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தீரன் சின்ன மலை என பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இம்மண்ணின் விடுதலை போரில் தன்னை தியாகம் செய்த வீரத்தின் அடையாளம் இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை என்றும் அவர்தம் நினைவுநாளில் அவரது நினைவை போற்றி வணங்குவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
இதனிடையே சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் தீரன் சின்னமலை திருவுருவ படத்துக்கு மரியாதை செலுத்திய சீமான், வீரமிக்க தமிழ் மூதாதையர்களில் தீரன் சின்னமலை வேறுபட்டவர் என்றும் சாதாரண குடிமகனாக இருந்து மக்களை ஒன்றுதிரட்டி படைகட்டி போராடி புரட்சி செய்தவர் தீரன் சின்னமலை என புகழாரம் சூட்டியுள்ளார்.
மரணத்தை கண்டு அஞ்சாத தமிழ் பெரும்பாட்டனான தீரன் சின்னமலைக்கு வீரவணக்கம் செலுத்துவதில், உள்ளபடியே பெருமகிழ்ச்சி அடைவதாக சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.