வாரிசுகளுக்கு இப்பவே தொகுதிகளை 'பட்டா' போடுகிறார்களா 'தலைகள்'.. முகம் சுளிக்க வைக்கும் பிரசாரம்!
சென்னை: லோக்சபா தேர்தல் பிரசாரம் தமிழ்நாட்டில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் சிலர் இந்த முறை தங்களது 'அடுத்த வாரிசு'களை பிரசாரம் என்ற பெயரால் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் கமுக்கமான வேலைகளையும் கச்சிதமாக செய்து வருவது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
வாரிசு அரசியல் என்பது அரசியல் களத்தில் தவிர்க்க முடியாததுதான். ஒரே குடும்பத்தில் இருந்து ஏராளமானோர் அரசியலுக்கு வருவது காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை காலந்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வாரிசு அரசியல் என்பது திணிக்க திணிக்க தெகட்டக் கூடியதாகவும் எரிச்சல் தரக்கூடியதாகவும் உருமாறி வருவதும் ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாததுதான். தற்போதைய லோக்சபா தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் வெளிப்படையாக 'தொகுதிகளுக்கு' இப்பவே பட்டா போடும் வகையில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மாஜி மத்திய அமைச்சர் ஒருவர் தந்தை, தாத்தா செல்வாக்கால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர். தற்போது தமது தொகுதியில் 'மகளுடன்' பிரசாரத்தை செய்து வருகிறார். அப்ப இவருக்கு பின்னர் இந்த தொகுதி 'அவருக்கு'தானா? என்கிற கேள்வியை இயல்பாகவே இந்த பிரசார யுக்தி எழுப்புகிறது.
இதேபோல தென் மாவட்டத்தில் 'செல்வரின்' மனைவி ஊர் ஊராக பிரசாரம் செய்து வருகிறார். ஒருவேளை செல்வருக்கு பதில் 'அம்மா'தான் அடுத்த எம்பியா? என்கிற கேள்வியையும் கேட்க முடிகிறது.
வடக்கே ஒரு தொகுதியிலும் அப்பா, சகோதரர், மாமனார், வீட்டுக்காரரைத் தொடர்ந்து களத்துக்கு வந்த பெண்மணி, மகளையும் களமிறக்கி இருக்கிறார். மகளுடன் பிரசாரம் செய்யும் கட்சிக்காரர்கள் தனி ரூட்டில் போய்க் கொண்டிருக்கின்றனர். இந்த தொகுதியும் 'பேத்தி'க்குதானா? என்கிற பேச்சு எப்படி எழாமல் இருக்கும்.
தமிழ்நாட்டு அரசியல் இனி வரும் காலங்களில் வாரிசுகளால் மட்டுமே நிரம்பிக் கிடக்கத்தான் போகிறதா? சாமானியர்களுக்கு எந்த ஒரு கட்சியுமே வாய்ப்பே தராதா? என்கிற யதார்த்தமான கேள்விகளை எழுப்பாமலும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.












Click it and Unblock the Notifications