அடடே! அந்தர் பல்டி அடித்த பிரேமலதா! தேமுதிகவுக்கு 14 சீட் கொடுத்தாதான் கூட்டணி என சொல்லவே இல்லையாம்!
சென்னை: சென்னை: லோக்சபா தேர்தலில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் கொடுத்தால்தான் கூட்டணி அமைப்போம் என எந்த ஒரு நிபந்தனையும் தாங்கள் விதிக்கவே இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடனும் இதுவரை அதிகாரப்பூர்வமாக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் எதிர்க்கட்சியாக இருந்ததுதான் தேமுதிக. ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பானன கதையாக வாக்கு வங்கியை தொலைத்துவிட்டது தேமுதிக.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தேமுதிக: தமிழ்நாட்டின் சட்டசபை தேர்தல்களில் 2006 முதல் போட்டியிட்டு வருகிறது தேமுதிக. அதிகபட்சமாக 2016-ல் 8.38% வாக்குகளைப் பெற்றது தேமுதிக. 2011 சட்டசபை தேர்தலிலும் கூட 7.88% வாக்குகளை அறுவடை செய்தது தேமுதிக. ஆனால் 2016, 2021 தேர்தல்களில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் படிப்படியாக குறைந்தது. 2016-ல் 2.39% வாக்குகளையாவது பெற்ற தேமுதிக கடந்த தேர்தலில் வெறும் 0.43% வாக்குகளைத்தான் பெற்றது. அத்தேர்தலில் நோட்டாவிடம் தோற்றுப் போன கட்சிதான் தேமுதிக.
லோக்சபா தேர்தலும் தேமுதிக ஓட்டும்: லோக்சபா தேர்தல்களிலும் கூட ஒரு முறை கூட 1%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதே கிடையாது. 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 0.75% வாக்குகளைப் பெற்றது தேமுதிக. இதுதான் அக்கட்சி லோக்சபா தேர்தலில் பெற்ற அதிகபட்ச வாக்கு. ஆனால் 2014 தேர்தலில் 0.38%; 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெறும் 0.15% வாக்குகளையே அக்கட்சியால் பெற முடிந்தது. இப்படியாக தேய்ந்து போன தேமுதிகதான் தமிழ்நாட்டில் தங்களை பெரிய கட்சியாக காட்டிக் கொண்டு இருக்கிறது. தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா, அவரது மகன் விஜயபிரபாகரன் இருவரும் இந்த வாக்கு சதவீதத்தை வைத்து கொண்டுதான் அதீதமாகவே பேசியும் வருகின்றனர்.
14 சீட் கேட்டு அதிர்ச்சி தந்த பிரேமலதா: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைந்த போது பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாக இறுதி மரியாதை செலுத்தினர். அது விஜயகாந்த் என்ற மனிதர் மீதான மரியாதையும் பற்றும். அதுவே தேமுதிகவின் பலம் என கணக்குப் போட்டு பேசி வருகிறார் பிரேமலதா விஜயகாந்த். அண்மையில் சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்திய அக்கட்சிப் பொதுச்செயலாளர் பிரேமலதா, 14 லோக்சபா தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் கொடுக்கும் கட்சியுடன் மட்டும் கூட்டணி என கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. திமுக கூடணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே 15 லோக்சபா சீட் கேட்டால் 8 அல்லது 9 கிடைக்கும் என்கிற கனவில் இருந்து வரும் நிலையில் நோட்டாவுடன் போட்டியிட்டு தோல்வி அடையும் தேமுதிக 14 தொகுதிகள் கேட்டது அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் தூக்கி வாரிப் போட்ட உணர்வை கொடுத்தது.
அதிமுக, பாஜகவுடன் பேச்சுவார்த்தை: இன்னொரு பக்கம், அண்ணா திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 3 லோக்சபா சீட் பிளஸ் 1 ராஜ்யசபா சீட் தரலாம் என்கிற முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாகவும் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக திரை மறைவுப் பேச்சுகள் நடப்பதாகவும் சொல்லப்பட்டது. அதேபோல பாஜகவுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துகிறது எனவும் தகவல்கள் தெரிவித்திருந்தன.
பிரேமலதா திடீர் பல்டி: ஆனால் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அதிமுக- பாஜக என எந்த ஒரு கட்சியுடனும் தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையே நடத்தவில்லை. அதேபோல 14 லோக்சபா தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும் நாங்கள் நிபந்தனை விதிக்கவில்லை. நானும் அப்படி எதுவுமே சொல்லவில்லை. எங்களது மாவட்ட செயலாளர்கள் தெரிவித்த கருத்தைதான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தேன். எங்களது கட்சி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications