லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்துவிட்ட போதிலும், அண்டை மாநிலங்களில் தேர்தல் முடியவில்லை என்பதால் அது முடியும் வரை எல்லைப் பகுதிகளில் சோதனை தொடரும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் இந்த முறை மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தேசியளவில் பார்க்கும் போது இதில் பாஜகவின என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை முதல் வாக்குப்பதிவு முடியும் நேரம் வரை கூட மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4இல் நடைபெறுகிறது.
கெடுபிடி: தேர்தல் காலங்களில் பொதுவாகப் பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை நடத்துவார்கள். இதனால், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்ல முடியாது. இது தவிரப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடந்த ஒரு மாதமாகவே சில இன்னல்களை எதிர்கொண்டனர். இப்போது தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இதுபோன்ற கெடுபிடிகள் இருக்குமா என்று பலருக்கும் சந்தேகம் இருந்தது.
இதற்கிடையே நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதாவது அண்டை மாநிலங்களில் தேர்தல் இன்னும் முடியாத நிலையில், அங்குப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து இருப்பார்கள் என்றும் அங்குச் சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
சத்யபிரதா சாகு: செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, "நிறையப் பகுதிகளில் வெயில் அதிகம் இருந்ததால் மாலை நேரத்தில் தான் வாக்குப்பதிவு அதிகரித்தது. பல பகுதிகளில் மாலை 6 மணிக்கும் கூட பொதுமக்கள் வாக்களிக்கத் திரண்டு வந்து இருந்தனர். அவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
சோதனை தொடரும்: தேர்தல் முடிந்து விட்டதால் பல இடங்களில் இருந்தும் பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெறப்படுகிறார்கள். இதற்கிடையே இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து முக்கிய அறிவுறுத்தல் ஒன்று வந்துள்ளது. அதாவது அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் தேர்தல் முடியும் வரை எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் இருப்பார்கள். மற்ற இடங்களில் இருந்து வாபஸ் பெறப்படுவார்கள்.
இந்த மாநிலங்களை ஓட்டி இருக்கும் கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் மட்டுமே பாதுகாப்புப் படையினர் இருப்பார்கள். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு மாநிலம் வாரியாக இல்லை. நாடு முழுக்க இருக்கிறது. எனவே, எல்லைகளில் மட்டுமே பறக்கும் படை சோதனை நடைபெறும். மறுவாக்குப்பதிவு எதாவது பகுதியில் தேவை என்றால் ரிப்போர்ட் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.
அமைதியாக நடந்து முடிந்தது: ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது ஆங்காங்கே சிறு சிறு வாக்குவாதம் போன்ற சம்பவங்களைத் தவிரத் தமிழ்நாட்டில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் எங்கும் பெரியளவில் பிரச்சினை வரவில்லை.
பல இடங்களில் வாக்காளர் பெயர் நீக்கப்பட்டு இருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. அது குறித்து விரிவாக ஆய்வு செய்தால் தான் என்ன விஷயம் என்பது தெரியும். நாம் ஒன்றை மறக்கக் கூடாது. தேர்தலுக்கு முன்பே ஒவ்வொரு சமயமும் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுச் சரிபார்க்கச் சொல்கிறோம். வரும் காலத்தில் கூட அதை முறையாக சரிபாருங்கள். அப்போது இதுபோன்ற சிக்கல்கள் குறையும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications