லோக்சபா.. தமிழகத்தில் 845 பேர் போட்டி.. 742 பேர் நிராகரிப்பு.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 845 பேர் போட்டியிடுகிறார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 845 பேர் போட்டியிடுகிறார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் ஒரே நாளில் நடக்கிறது. இதனால் தமிழக தேர்தல் களம் அதிக கவனம் பெற்றுள்ளது. தமிழகம் புதுச்சேரி உட்பட 40 லோக்சபா தொகுதிகள், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலுக்காக இதுவரை அதிமுக, திமுக, பாமக, விசிக, தேமுதிக, அமமுக, பாஜக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. இவர்கள் எல்லோரும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
எப்போது நடந்தது
தமிழகத்தில் வேட்புமனுத்தாக்கல் கடந்த மார்ச் 19ம் தேதி துவங்கியது. மார்ச் 26 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. பல முக்கியமான வேட்பாளர்கள் கடைசி நாளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
யார் எல்லாம்
திமுக, அதிமுகவை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் 25, 24ம் தேதிகளில் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அமமுகவினர் கடைசி நாளான 26ம் தேதி தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
பரிசீலனை நடந்தது
இதையடுத்து வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை மார்ச் 27ம் தேதி நடைபெற்றது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மூன்று மணிக்கு இதற்கான அவகாசம் முடிவடைந்தது. இதையடுத்து இதுகுறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
என்ன முடிவு
அதன்படி 39 மக்களவைத் தொகுதிகளில் 1596 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 9 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். மீதமுள்ளதில் 845 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 742 பேரின் வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இவர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.