காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்… திமுக வலியுறுத்தல்
சென்னை: 18 தொகுதிகளோடு சேர்த்து, காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த திமுக சார்பில், வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்
சென்னையில் தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
சென்னை கிண்டி தனியார் ஹோட்டலில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

தமிழகம் வருகை
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல்18 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா, தேர்தல் ஆணைய நிர்வாக இயக்குநர்கள் திலீப் சர்மா மற்றும் திரேந்திர ஓஜா ஆகியோர் டெல்லியிலிருந்து தமிழகம் வந்துள்ளனர்.

தனித்தனியாக ஆலோசனை
இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அதிமுக,திமுக,தேமுதிக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேர்தல் அதிகாரிகள், தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.

நியாயமான தேர்தல்
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாக கூறினார்.

காப்பீடு திட்டம்
நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு விளம்பரம் செய்யக்கூடாது என விதியுள்ள நிலையில், காப்பீடு திட்டம் தொடர்பான தபால்கள் அனுப்பப்பட்டுள்ளது; இதன் நகல்களை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளதாகவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

மாற்றம் வேண்டும்
அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தும் முறையில் மாற்றம் செய்துள்ளனர் என குற்றம் சாட்டிய ஆர்.எஸ். பாரதி, சரியாக செயல்படாத காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.












Click it and Unblock the Notifications