54 வருடம்.. 13 பட்ஜெட்.. ஒரே தொகுதி.. ஒரே எம்எல்ஏ.. "கேரளத்து கருணாநிதி" கே.எம். மணி!
சென்னை: இங்கே நமக்கு எப்படி கருணாநிதியோ, அப்படி கேரளாவுக்கு கே.எம்.மணி அரசியல் பணி ஆற்றியுள்ளார்! 54 வருடம் தொடர்ந்து எம்எல்ஏ... அதாவது அரைநூற்றாண்டு காலம் எம்எல்ஏவாக இருந்தவர்தான் மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் மணி!
இவர் ஒரு வக்கீல். கேரள மாநில காங்கிரசின் முன்னாள் தலைவரான பிடி சாக்கோ இவரது உறவினர் ஆவார். 1965ம் ஆண்டு முதன் முதலாக கோட்டயம் மாவட்டத்தில் பாலா தொகுதி உருவானது.
அப்போது இந்த தொகுதியில் முதல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மணி. ஆனால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாததால் ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் 1967ம் ஆண்டு திரும்பவும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அப்போதிருந்தே வெற்றிதான்! 1967ம் ஆண்டு முதல் அவர் எந்த தேர்தலிலும் தோல்வி அடைந்ததே கிடையாது.
கேரள அரசியலில் மிக முக்கியமானவர்.. 86 வயதில் காலமானார் கேரளா காங்கிரஸ் (எம்) மணி!
அரை நூற்றாண்டு
இதுவரை அங்கு 12 தேர்தல்கள் நடந்துள்ளன. அத்தனையிலும் மணி மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். அதாவது பாலா தொகுதி இதுவரை ஒரே ஒரு எம்எல்ஏவை மட்டுமே கண்டு வந்துள்ளது. தொகுதி மாறாமல் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்று இந்த அரை நூற்றாண்டை கடந்தார் மணி!
13 முறை பட்ஜெட்கள்
அது மட்டுமில்லை, நிதி, வருவாய், சட்டம் உள்ளிட்ட அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர். இதில் மாநில நிதியமைச்சராக மட்டும் 4 முறையும், 7 முறை சட்ட அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். நீண்ட காலமாக நிதியமைச்சர் பொறுப்பில் இருந்ததால் 13 பட்ஜெட்களை தாக்கல் செய்திருக்கிறார்.
முதல்வர் பதவி
இவ்வளவு பொறுப்புக்களை திறம்பட நடத்துபவருக்கு முதல்வர் பதவி தேடி வராமல் இருக்குமா என்ன? எத்தனையோ முறை அப்பொறுப்பு தேடி வந்தது. ஆனால் சூழ்நிலை காரணமாக மணியால் முதல்வராக முடியவில்லை.
பென்ஷன்
இன்று வழங்கப்படும் விவசாயிகள் மற்றும் விதவைகளுக்கு பென்ஷன் திட்டத்தை உலகிலேயே முதன்முதலில் அறிமுகமானது, இவர் நிதியமைச்சராக இருந்த காலத்தில் தான் என்பது பெருமை கொள்ளத்தக்க விஷயமாகும்!
கேரள சட்டசபை
கடந்த 2017-ம் ஆண்டு, 50 வருட அரசியலை இவர் பூர்த்தி செய்ததற்காக கேரள சட்டசபையில் பாராட்டு தெரிவித்தனர். கட்சி பேதமின்றி ஒரு மூத்த தலைவரை உறுப்பினர்கள் அனைவருமே பாராட்டியது இன்றைய அரசியல் சூழலில் மிக மிக முக்கியமான ஒன்று!
பினராயி விஜயன்
அது மட்டுமில்லை.. "ஒரு அரசு வருவதும் மற்றொரு அரசு போவதும் எப்போதுமே நடைபெறும் செயல்தான். ஆனால் கே.எம்.மணி மட்டும் எப்போதும் சட்டமன்றத்திலேயே இருக்கிறார்" என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டினார்.
பேரிழப்பு
இவரது நலன் முழுவதுமே அடித்தட்டு மக்கள் மற்றும் விவசாயிகளை நோக்கியே பயணித்தது. அதனால்தான் இவர் இன்றும் பேசப்பட்டு வருகிறார். கேரளாவின் வளர்ச்சியில் மணியின் பங்கு மிகவும் மகத்தானது என்பதால் அவரது மறைவு, கேரள மக்களுக்கு நிச்சயம் பேரிழப்புதான்!