வானிலையில் திடீர் மாற்றம்..வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..புயலாக மாறுமா?
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை காலை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வானிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியது. நவம்பர் மாதம் முற்பகுதி வரை மழை கொட்டியது. நீர் நிலைகள் நிரம்பின. சில வாரங்கள் ரெஸ்ட் எடுத்த மழை கடந்த வாரம் முதல் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. அதற்குக் காரணம் மாண்டஸ் புயல் கரையைக் கடந்ததுதான்.

மாண்டஸ் புயல் கரையைக் கடந்த பின்னரும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகையில் கொட்டித்தீர்த்த கனமழையால் குன்னூர் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள் மற்றும் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் நொய்யல் ஆற்றிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கோவை குற்றாலம் அருவிக்கு வழக்கத்தைவிட நீர் அதிகமாக ஆர்ப்பரித்து செல்வதாலும், இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதாலும் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,488 கன அடியாக உயர்ந்ததால் 5,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் 104.7 அடி வரை நீர்மட்டம் எட்டியதை அடுத்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 3 நாட்களில் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இன்றைய தினம் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை காலை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து மாண்டஸ் புயலாக மாறி மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் நாளைய தினம் வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மையம் வலுவடைந்து புயலாக மாறி மழையை தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications