வலிமையடையும் காற்றழுத்தம்..மிரட்ட வரும் மழை..சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்..உஷார் மக்களே!
சென்னை: காற்றழுத்த தாழ்வு மையத்தால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்பதால் அதிகபட்சமாக 20 செமீ முதல் 25 செமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் வலிமையுடைந்து தமிழகம், புதுச்சேரி நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக இன்று முதல் மீண்டும் மழை கனமழை முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தற்போது மேலும் தீவிரம் அடைய தொடங்கியுள்ளதால், தென்மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு மையம்
தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4.5 கிமீ உயரம் வரை நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி, நேற்று காற்றழுத்தமாக மாறியது. அது மன்னார் வளைகுடா பகுதி மற்றும் வட இலங்கை பகுதியை நெருங்கி வந்தது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு வந்து வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

3 காற்று சுழற்சிகள்
இது தவிர இலங்கை அருகே ஒரு காற்று சுழற்சி, கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சி, அந்தமான் பகுதியில் இருந்து ஒரு காற்று சுழற்சி என 3 காற்று சுழற்சிகள் தமிழக கடலோரப் பகுதியை நெருங்கி வருவதால், மன்னார் வளைகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் இந்த 3 காற்று சுழற்சியும் இன்று இணையும். அதனால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும்.

அதி கனமழை
இதனால், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். மேலும், இன்று நள்ளிரவு முதல் வடதமிழகத்திலும் மழை பெய்யும். 11ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். குறிப்பாக கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரை கனமழை இருக்கும். இது தவிர கேரளா, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, பகுதிகளிலும் 11, 12, 13ம் தேதிகள் வரை கனமழை பெய்யும்.

25 செமீ வரை மழை பெய்ய வாய்ப்பு
இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்பதால் அதிகபட்சமாக 20 செமீ முதல் 25 செமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனமழையை பொறுத்தவரையில் 6 செமீ, மிக கனமழை 11 செமீ, அதிக கனமழை 15 செமீ, அதீத கனமழை 20 செமீ வரையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் பெரும்பாலான இடங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

எங்கெங்கு மிக கனமழை
சென்னையில் கடந்த அக்டோபர் முதல் நேற்று வரை இயல்பாக 40 செமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் 46 செமீ வரை பெய்துள்ளது. இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

பல மாவட்டங்களில் கனமழை
நாளை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். மேலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications