பொது இடங்களில் அலப்பறை செய்யும் குடிமகன்கள்.. என்ன செய்ய போறீங்க? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்ட பிறகு, பொது இடங்களில் மக்கள் மது அருந்துவதை தடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் அண்மையில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தினமும் இரவு 10 மணிக்கு மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை மூடப்பட்டு விடுகின்றன. இதனால் அந்த நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள் மதுபானக் கடை முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை பொது இடங்களிலும், கால்வாய்களிலும் வீசி செல்கிறார்கள்.

இதுதவிர, சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்திவிட்டு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுறது. மேலும், அப்படி பெ்ாது இடத்தில் மது அருந்தும் நபர்களால் தனியாக செல்பவர்கள் மற்றும் பெண்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. குற்றங்களும் நடைபெறுகின்றன. மதுபானம் வாங்குபவர்கள் அதை அருந்துவதற்கு பார்கள் இயங்கும் நேரங்களை மாற்றம் செய்தால் பொது இடங்களில் நடக்கும் குற்றங்களை தடுக்கலாம் என டிசம்பர் 9-ம் தேதி தமிழக மதுவிலக்கு துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மனு அளித்தும், எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுத்து, நெறிமுறைபடுத்தும் வகையில் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவானது, பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்கலையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு குறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications