வடமாநிலத்தவர்கள் அடித்ததாக பரவும் வீடியோ.. தொடர்ந்தால் பிச்சை எடுக்கணும்.. மதுரை முத்து ஆவேசம்
வடமாநிலத்தவர்கள் தமிழக இளைஞரை விரட்டி அடித்ததாக பகிரப்படும் வீடியோ குறித்து மதுரை முத்து ஆவேசமாக சில கருத்துகளை கூறியுள்ளார்.
சென்னை: தமிழரை வடமாநில இந்தியர்கள் துரத்தி அடிப்பது போன்ற ஒரு வீடியோ பரவி வரும் நிலையில் அந்த வீடியோவை மேற்கோள்காட்டி மதுரை முத்து கொந்தளித்துள்ளார்.
வடஇந்தியாவில் வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லை என்பதால் ஒடிஸா, ஜார்க்கண்ட், அஸ்ஸாம், பீகார், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பலர் தென்னிந்திய மாநிலங்களில் தஞ்சம் அடைந்து பிழைத்து வருகிறார்கள்.
இவர்களில் பலர் இங்கேயே ரேஷன் கார்டு பெற்று தமிழக அரசின் நலத்திட்டங்களையும் பெற்று வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் பல்கி பெருகியுள்ளார்கள். இவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள்.
இது தமிழ்நாடா அல்லது வட மாநிலமா? வட மாநிலத்தவர்கள் அட்டூழியம் அதிகரிப்பு! கொதிக்கும் வேல்முருகன்!
ஹோட்டல் வேலை
கட்டட வேலை, ஹோட்டல் வேலை, உணவு செய்யும் மாஸ்டர், வடமாநில பிரத்யேக உணவுகளை தயாரிப்பது, மருத்துவமனைகள், அபார்ட்மென்ட்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
தொழில் நகரம் திருப்பூர்
குறிப்பாக தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் கூட வட இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதத்திற்கு மேல் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் திருப்பூரில் அனுப்பர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பனியன் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் டீக்கடையில் ஏற்பட்ட பிரச்சினைக்காக தமிழக தொழிலாளர் ஒருவரை கட்டை, பெல்ட் போன்றவற்றால் துரத்தி துரத்தி அடிப்பதாக கூறும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வடமாநில தொழிலாளர்கள்
வடமாநில தொழிலாளர்கள் தாக்குவது போன்ற வீடியோவை சித்தரித்து பரப்பியது தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீஸார் அடங்கிய தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோ குறித்து ஸ்டான்ட் அப் காமெடி செய்யும் மதுரை முத்து கொதித்து எழுந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் வீடியோ
அந்த வீடியோவில் திருப்பூரில் சுமார் 100 பேர் கத்தி, பெல்ட், மரக்கட்டைகளை கொண்டு நம் தமிழக இளைஞர் ஒருவரை தாக்கும் வீடியோவை பார்த்தேன். தமிழகத்திற்கு வேலை கேட்டு வந்தவர்கள் முதலில் 10 சதவீதம்தான் இருந்தார்கள். ஆனால் இப்போது திருப்பூரில் மட்டும் 65 சதவீதம் பேர் வடமாநிலத்தவர் உள்ளனர்.
இளைஞர்கள்
தமிழகத்திற்கு வந்தவர்கள் நம் தமிழக இளைஞர்களையே அடிக்க துணிந்து விட்டனர். வடமாநிலத்தவர் நம்மை விரட்டி அடிக்கும் அளவிற்கு தமிழ் இளைஞர்கள் விழிப்புடன் இருக்கிறீர்கள். பாலாபிஷேகம் செய்யும் நமக்கே கொஞ்ச நாளில் வடமாநிலத்தவர் பால் ஊற்ற போகிறான். நம் ஊரில் செட்டியார் தெரு, கவுண்டர் தெரு, தேவர் தெரு இருப்பத போல் வடக்கன் தெரு என கண்டிப்பாக வரும்.
விழிப்புணர்வு
தமிழக இளைஞரை விரட்டி அடிக்கும் காட்சியை பார்க்கும் போது மிகவும் சங்கடமாக இருக்கிறது. நம்மால் இரு நாட்கள் வட இந்தியாவில் இந்தி தெரியாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் இங்கு வந்து நம்மையே அடிக்கும் அளவிற்கு நாம் அசால்ட்டாக இருக்கிறோம். தமிழக இளைஞர்கள் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மதுரை முத்து அந்த வீடியோவில் பேசியிருந்தார். இந்த வீடியோவுக்கு பலர் ஆதரவு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். பலர் ரீட்வீட் செய்து வருகிறார்கள். எனினும் வைரலாகி வரும் வீடியோ குறித்த உண்மைத்தன்மை சைபர் கிரைம் விசாரணையின் பேரில்தான் வெளியே வரும்.