முண்டாசு கவிஞர் பாரதியார் 139-வது பிறந்தநாள்... நினைவுகூர்ந்து கொண்டாடிய மக்கள்...!
சென்னை: முண்டாசு கவிஞர் பாரதியாரின் 139-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது பிறந்த இல்லம் மற்றும் மணிமண்டபத்தில் உள்ள பாரதி சிலைக்கு மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல் சமூக வலைதளங்களிலும் மகாகவி பாரதியாரின் பெருமைகளையும், சிறப்புகளையும் பதிவிட்டு சமூக வலைதள ஆர்வலர்கள் முண்டாசு கவிஞரை நினைவு கூர்ந்தனர்.
பாரதியாரின் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், போன்றவைகள் காலத்தால் அழியாத காவியமாக நிலைத்து நிற்கின்றன. சுதந்திரப் போராட்டத்தின் போது பாரதியாரின் எழுச்சிமிகு வரிகள் இளம் காளையர்களை வீறுகொண்டு எழச் செய்தன. தனது கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் தேச உணர்வை ஊட்டி வளர்த்த பெருமைக்குரியவர் பாரதியார்.
தமிழ் மொழியையும், தாய்நாடான இந்தியாவையும் இரு கண்களாக கருதியவர் பாரதியார்: பிரதமர் மோடி புகழாரம்
சாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்ற பாரதியாரின் வரிகள் சாதி ஒழிப்புக்கான முன்னோடி முற்போக்கு நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றன. இதேபோல் பெண்களை பெருமிதப்படுத்தும் வகையில் பல பாடல்களை இயற்றியுள்ளார் பாரதியார். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எனப் பாடி பெண் உரிமைக்காக முதல் குரல் கொடுத்தவர்.
இப்படி எண்ணற்ற பெருமைகளை தன்னகத்தே கொண்ட பாரதியார், தன் வாழ்நாளின் பெரும் பகுதியை வறுமையில் கழித்தவர். பாரதியார் இன்று இல்லை என்றாலும் அவரது கவிதைகளும், தேச உணர்வு பாடல்களும் இன்னும் நூற்றாண்டு கடந்தும் நிலை நிற்கும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.