"நிழல் நிஜமாகிறது".. லாஸ்ட் டைம் மாதிரி இல்லை.. திமுகவை நெருங்கும் 2 கட்சிகள்.. ஒரே சஸ்பென்ஸ்..!
திமுகவுடன் இந்த முறை 2 கட்சிகள் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டுகிறதாம்
சென்னை: திமுகவுடன் கூட்டணி வைக்க 2 பிரதான கட்சிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதுகுறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தை வட்டமடிக்க துவங்கி உள்ளன.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. அந்தவகையில், திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், முதல் நபராக களத்தில் குதித்துவிட்டது பாஜக.. தனித்து போட்டியிடுமா? அல்லது அதிமுகவுடன் வழக்கம்போல் கூட்டணி வைத்து போட்டியிடுமா என்பதெல்லாம் சஸ்பென்ஸாகவே உள்ளது.
அதேசமயம், அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசல், மாஜிக்கள் மீதான ரெய்டுகள், இவைகளை எல்லாம் கண்டு, கூட்டணி கட்சிகள் சோர்ந்து போயுள்ளதாக தெரிகிறது..
குறிப்பாக, அதிமுகவை பாமக கடுமையாக தாக்கி பேசி வருகிறது.. அதனால் இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்பதால், அநேகமாக திமுக பக்கம் வரக்கூடும் என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள்.
இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்படும் - மதுரை கூட்டத்தில் சு.சுவாமி ஆரூடம்!
விஜயகாந்த்
தேமுதிகவை பொறுத்தவரை, கடந்த சட்டசபை தேர்தலின்போதே எடப்பாடி மீது கடுமையான அதிருப்திக்கு ஆளானதால், இந்த முறையும் அதிமுக கூட்டணியில் இடம்பிடிக்க வாய்ப்பு இருக்காது.. எனவே, தேமுதிகவும், திமுக பக்கம் தாவ ஆர்வம் காட்டுவதாகவே சொல்கிறார்கள்.. இதற்கு நடுவில் மநீமய்யமும், திமுகவுடன் இணைய தயாராக இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.. அதற்கேற்றவாறு, தேமுதிக + பாமக + மநீம 3 கட்சிகளையும் இணைத்து கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே திமுகவின் விருப்பமாகவும் இருக்கிறதாம்.. காரணம், தேசிய அளவில் பாஜக கூட்டணியை எதிர்கொள்ள, அனைவருமே ஒன்று சேர்ந்தால் தான் முடியும் என்று திமுக நம்புகிறதாம்.
காங்கிரஸ்
இப்படிப்பட்ட சூழலில், மேலும் சில யூகமான தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. ஒருவேளை இந்த கட்சிகள் திமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில், பாமகவிற்கு தர்மபுரியும், பெரம்பலுாரும் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதாம்.. பாமக புதுச்சேரியை கேட்டால் அதை ஒதுக்கி தரவும் திட்டமிட்டுள்ளதாம்.. எப்போதுமே புதுச்சேரியை காங்கிரசுக்குதான் திமுக ஒதுக்கி தருவது வழக்கம்.. கடந்த முறையும் தமிழகத்தில் 9 + புதுச்சேரி 1 என ஒதுக்கப்பட்டது.. இந்த முறையும் புதுச்சேரிக்கு காங்கிரஸ் என்பது யோசனையில் இருந்தாலும், பாமக கூட்டணிக்குள் வரும் பட்சத்தில், புதுச்சேரி காங்கிரஸுக்கு கிடைக்காமல் போகலாம் என்கிறார்கள்.
10 சீட்
பாமக + மநீம + கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், தேமுதிகவுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கலாம் என்று திமுக தரப்பில் ஒரு பேச்சு உள்ளதாம்.. இந்த கட்சிகள் எல்லாம் உள்ளே வந்தால், காங்கிரசுக்கான 10 தொகுதிகளை நிச்சயம், பாதியாக குறைக்க திமுக முடிவெடுக்கவும் வாய்ப்புள்ளதாம்.. இந்த சீட் எண்ணிக்கை எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும், இந்த கூட்டணியே சாத்தியமாகுமா என்பதுதான் பிரதான கேள்வியாக உள்ளது.. காரணம், திமுகவுடன் கூட்டணி வைக்க பாமக தூது விட்டு பார்த்தும், சாதகமான முடிவை அறிவாலயம் தரப்பு இன்னும்சொல்லவில்லை என்கிறார்கள்..
என்ட்ரி
இது தொடர்பாக கட்சிக்குள்ளேயே ஆலோசனைகள் நடத்தப்பட்டு, அதற்கு பிறகுதான் ஒரு முடிவுக்கு திமுக வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆனால், 2024 தேர்தலில் திமுகவுடன் இணைவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று பாமக மேலிடம் முடிவெடுத்திருக்கிறதாம்.. மேலும், வன்னியர் இட ஒதுக்கீடு என்கிற கத்தியும் பாமகவின் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருப்பதால், திமுகவை நம்பி இருப்பதை தவிர வேறு வழியும் இல்லை என்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
விஜயகாந்த் பிளான்
அதுமட்டுமல்ல, அன்று அதிமுக கூட்டணியில் நின்று பாமக சார்பில் வெற்றி பெற்ற 5 எம்எல்ஏக்களும், முதலில் எதிர்க்கட்சித் தலைவரை சென்று பார்க்காமல், முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றபோதே இந்த சமிக்ஞைகள் தொடங்கிவிட்டதாம்.. இப்போது கூட்டணி பெயரில் அது பகிரங்கமாக நிரூபணமாக போகிறது என்கிறார்கள். ஆனால், பாமக கூட்டணியில் என்ட்ரி தந்தால், தேமுதிக திமுக கூட்டணியில் இடம்பெற சம்மதிக்குமா? தெரியவில்லை.. இரு கட்சிகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சீட், குறிப்பிட்ட தொகுதிகளையே மாறி மாறி கேட்கும் என்பது கடந்த கால அரசியல் வரலாறு..
மாறி மாறி பேச்சு
அதேபோல, பாமக + விசிக இரண்டு கட்சிகளுக்குமே ஆகாது என்பதால், ஒரே கூட்டணியில் இடம் பெறுவார்களா என்பதும் சந்தேகமாக உள்ளது.. அதேபோல, சொற்ப சீட்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டால், காங்கிரஸ் கூட்டணியை விட்டு செல்லுமா? டிடிவி அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா? என்ற பேச்சும் ஓடிக்கொண்டிருக்கிறது.. இந்த கூட்டணியில் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு தெரியவில்லை.. எம்பி தேர்தலுக்கு இன்னும் டைம் இருக்கிறது என்றாலும், இதுபோன்ற யூகமான பேச்சுக்கள் இப்போதே மீடியாவை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன..!