தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் நடந்த 5 முக்கிய அரசியல் மாற்றங்கள்! ஹாட்டாபிக் இதுதான்!
சென்னை: தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் என்னென்ன அரசியல் மாற்றங்கள் நடந்தன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். மல்லை சத்யா கட்சி தொடக்கம் முதல் பாமக தலைவர் அன்புமணிதான் என தேர்தல் ஆணையம் அறிவித்தது வரை பட்டியலிடலாம்.

அரசியல் வட்டாரத்தில் நவம்பர் மாதம் பல்வேறு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அவற்றால் அரசியல் களமே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது எனலாம். அந்த வகையில் முதலில் மதிமுகவில் இருக்கும் பிரச்சினை!
மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோ அரசியலுக்கு வந்ததும் அவருக்கு மூத்த நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். வாரிசு அரசியலை எதிர்த்து திமுகவில் இருந்து பிரிந்து வந்த வைகோ, தற்போது அதையேதானே செய்கிறார் என விமர்சித்தனர்.
துரை வைகோ
ஆனால் வைகோவோ, துரை வைகோ கட்சியின் பொதுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டார் என தெரிவித்தார். இதையடுத்து சிலர் மதிமுகவில் இருந்து விலகினர். ஏதோ ஒரு காரணத்திற்காக வைகோவுடன் ஏற்பட்ட மோதலால் நாஞ்சில் சம்பத்தும் மதிமுகவில் இருந்து விலகினார்.
வைகோவின் வலது கரம்
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வைகோவின் வலது கரம் என சொல்லப்பட்ட மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதையடுத்து வைகோவால் கைகுலுக்கப்பட்டு இருவரும் ஒரு கூட்டத்தில் சேர்த்து வைக்கப்பட்டனர்.
மல்லை சத்யா
ஆனால் துரை வைகோவும் மல்லை சத்யாவும் சபை நாகரீகம் கருதியே கை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்தும் அவர்களுக்கிடையே அதிகார மோதல் உள்ளிட்டவைகளால் மல்லை சத்யா, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
மல்லை சத்யா புதிய கட்சி
இதையடுத்து வைகோ, மல்லை சத்யா மீதும், மல்லை சத்யா வைகோ மீதும் குற்றம்சாட்டிக் கொண்டனர். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி திராவிட வெற்றிக் கழகம் (DVK) எனும் கட்சியை அவர் தொடங்கியுள்ளார்.
மனோஜ் பாண்டியன்
ஆலங்குடி அதிமுக அதிருப்தி எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 5ஆம் தேதி அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். அன்று மாலையே தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி
அதே நாளில் முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் இருந்து பறிக்கப்பட்ட திமுக துணை பொதுச் செயலாளர் என்ற கட்சி பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டது. திமுகவின் மூத்த அமைச்சராக இருந்தவர் பொன்முடி, இவர் பெண்களுக்கான விடியல் பயணத்தை ஓசி பயணம் என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு நடந்த திமுக பொதுக் குழு கூட்டத்தில் காலை விடிந்ததும் என்ன பஞ்சாயத்தை எந்த நிர்வாகி இழுத்துக் கொண்டு வருவாரோ என்பதை நினைத்தால் இரவில் தூக்கம் வரவில்லை என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மீண்டும் பதவி
எனினும் பட்டை, நாமம் என்ற இந்து மதத்தின் அடையாளத்தை அவதூறாக அவர் பேசியதால் சர்ச்சை எழுந்தது. அதனால் அவரது கட்சி பதவியும் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு விழுப்புரம் தொகுதியில் பொன்முடி முழு கவனம் செலுத்த வேண்டி, அவருக்கு மீண்டும் கட்சி பதவி கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
செங்கோட்டையன்
அது போல் நவம்பர் மாதத்தில் நடந்த மிக முக்கியமான விஷயம் கொங்குவே அதிரும் அளவுக்கு செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததுதான் ஹாட் டாபிக்! அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வென்று அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என செங்கோட்டையன் வலியுறுத்தினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ செங்கோட்டையனின் பதவியை பறித்து பின்னர் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவரை அதிமுகவிலிருந்தே நீக்கிவிட்டார்.
தவெகவில் செங்கோட்டையன்
இந்த நிலையில் செங்கோட்டையன் தனது நீக்கத்தை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் அவர் தவெகவில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி இணைந்தார். முன்னதாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
பாமக விவகாரம்
அது போல் பாமகவில் தந்தை - மகனுக்கு இடையே மோதல் போக்கு எழுந்தது. அன்புமணி, பெற்ற தாயையே பாட்டிலால் அடித்தார் என ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். அவரை மத்திய அமைச்சராக்கியது தனது தவறு என்றும் கூறியிருந்தார். இதையடுத்து இருவரும் நிர்வாகிகளை நீக்குவதும் நியமிப்பதுமாக இருந்தனர். இந்த நிலையில் மாம்பழச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அன்புமணி நாடிய போது பாமக தலைவர் அவர்தான் என தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமதாஸ், தேர்தல் ஆணையம் சதி செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் 4ஆம் தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications