வெற்றி பெருவிழாவை ரெடி பண்ணுங்க.. மதுரையில் அதிரடி காட்டிய கமல்..ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான்.. ஏன்?
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு வாக்குப்பதிவே இன்னும் நடக்காத நிலையில், வெற்றி விழாவுக்கு தயாராகுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் கூட்டணியை அமைத்துக் களமிறங்குகின்றன. இந்த இரண்டு கூட்டணியை எதிர்த்து கமலின் மக்கள் நீதி மய்யம் வலுவான கூட்டணியை அமைத்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கூட்டணி
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது. இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகளும், சமகவுக்கு 33 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்கள் நீதி மய்யம் 142 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
கமலும் ராதிகாவும் சூறாவளி பிரசாரம்
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் கமல் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், மதுரையில் இன்று கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் சமக முதன்மை துணைப் பொதுச் செயலாளரும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகாவும் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
எது வெற்றி
அப்போது பேசிய கமல், நாளை நமதே என்று கூறும் சில தொண்டர்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இன்னும் வேலை இருக்கிறது. கடைசி நேரத்தில் குளறுபடி செய்ய இங்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். வெற்றி என்பது முதல்வர் பதவியில் அமருவது இல்லை என்றும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே உண்மையான வெற்றி என்றும் கமல் பேசினார்.
வெற்றி பெருவிழா
மேலும், ஏப்ரல் 6ஆம் தேதி சரித்திரம் திரும்பும் நாள் என்று குறிப்பிட்ட கமல், வெற்றி பெருவிழா மதுரையில் நடக்கும் என்றும் அதற்கு ஏற்பாடு செய்ய தொடங்கலாம் என்றும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாகப் பேசினார். மேலும், எவர்சில்வர் பாத்திர பட்டறை தொழிலாளர்களுக்கு மருத்துவக்காப்பீடு செய்து தரப்படும் என்றும் மின் விநியோகம் சீராகக் கிடைக்கும் என்றும் அவர் வாக்குறுதிகளை அளித்தார்.
திமுக அகல வேண்டும்
இவையெல்லாம் அடிப்படை வசதிகள் என்று குறிப்பிட்ட அவர், ஆனால் இதையெல்லாம் செய்து கொடுக்க ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள் என்றும் விமர்சித்தார். மேலும், திமுக உருவானபோது பலரும் அக்கட்சியை வரவேற்றார்கள் என்று தெரிவித்த அவர், இப்போது திமுக அகல வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அரசியல் மாற்றம் ஏப்ரல் 6ஆம் தேதி நிச்சயம் நிகழும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொஞ்சம் ஓவர்தான்
கமலின் பேச்சைக் கேட்டு அங்குக் கூடியிருந்தவர் ஆராவாரம் செய்தனர். இருந்தாலும் தான் எதிர்கொள்ளும் முதல் சட்டசபைத் தேர்தலின் வாக்குப்பதிவு கூட முடியாத நிலையில், வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்வது எல்லாம் கொஞ்சம் ஓவாரகவே இருப்பதாக அங்கிருந்த சிலர் முணுமுணுத்தனர்.