வேலுமணி 811 கோடி ஊழல்! 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு? திமுக தயங்குவது ஏன்? மநீம கமல்ஹாசன் கேள்வி!
சென்னை : கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விட்டதில் அரசுக்கு ரூ.811 கோடி இழப்பு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? என மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது.
டெண்டர் முறைகேடு.. எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கு தடையில்லை.. உயர்நீதிமன்றம் அதிரடி
டெண்டர் முறைகேடு
இந்நிலையில் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு டெண்டர் முறைகேட்டில் பங்கிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளதாகக் கூறி அவர்களையும் வழக்கில் சேர்த்து, உரிய விசாரணை நடத்த அனுமதிகோரி கடந்த நவம்பர் 2021ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அந்த கடிதத்திற்கு இதுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள்
இந்நிலையில் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? என மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "முன்னாள் அமைச்சரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திமுக அரசுக்கு தயக்கம் ஏன்? சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விட்டதில் அரசுக்கு ரூ.811 கோடி இழப்பு ஏற்பட்டதாக முறைகேடு வழக்கு தொடரப்பட்டது.
எஸ்.பி.வேலுமணிக்கு உடந்தை
இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிகோரி,7 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியும், இதுவரை ஒப்புதல் வழங்காதது பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
தயக்கம் ஏன்?
முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து, இனியும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு எந்த அதிகாரியும் துணைபோகாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்." என அந்த ட்விட்டர் பதிவில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.