வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு.. போலி வாக்காளர்கள் நீக்கப்படவேண்டும்.. மநீம வலியுறுத்தல்
சென்னை : வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான திட்டத்தை முறையாக செயல்படுத்தவேண்டும் என மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
போலி வாக்களார்கள் பெயர்களை நீக்குவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஆத்மார்த்தமான முயற்சியாக இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா 2021 மக்களவையில் நிறைவேறி உள்ளது. இதன் மூலம் தேர்தல் நடைமுறைகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தமுடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் மசோதா நிறைவேற்றம்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கனா தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா 2021 மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் மீதான மக்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க, தேர்தல் சட்டங்களில் நான்கு வகையான சீர்திருத்தங்களைக் கொண்டு வர, தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இதில் முதல் சீர்திருத்தமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் இரண்டாவது சீர்திருத்தமாக புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய, ஆண்டுக்கு 4 முறை வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள், சொந்த ஊரில் வாக்களிக்க முடியாத பட்சத்தில் அவர்களின் வாக்கை மனைவி அளிக் சட்டத்தில் இடம் இருந்தாலும் பணியில் இருக்கும் பெண் அதிகாரியின் கணவர் வாக்களிக்க சட்டம் இல்லை. எனவே கணவர்களுக்கும் அந்த உரிமையை அளிக்க வேண்டும் என்பது மூன்றாவது சீர்திருத்தம். நான்காவது சீர்திருத்தமாக வாக்குப்பதிவு மையத்தை எந்த இடத்திலும் தேர்வு செய்து கொள்ளும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை ஏற்று தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா 2021 மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதை அடுத்து நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் வேறு வழியின்றி எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கிடையே மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் புகார்
இதனிடையே வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் திட்டம் குறித்து மக்கள் நீதி மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் தங்கவேலு, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்களை இணைப்பது, போலி வாக்காளர் பெயர்களை நீக்குவதற்கான உண்மையான முயற்சியாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை மூலம் வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களித்ததாகவும், சிலர் தோல் ஒவ்வாமை இருப்பதாக கூறிவிட்டு நகத்தில் மட்டும் மை வைத்துக்கொண்டு வாக்களிப்பதும் பின்னர், அதை அழித்து விட்டு மீண்டும் மற்றொரு வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தாகவும் கேள்விபட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

போலி பெயர்களை நீக்க வேண்டும்
மேலும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும்போது மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டிய பொறுப்பு, தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது என தெரிவித்துள்ள அவர், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள இந்த சூழலில் முறைகேடுகள் நடப்பதைக் கண்டறிவதற்கு எளிய வழிகள் பல இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார். வாக்காளர்கள் பட்டியலில் போலி பெயர்களை களைய வீடு வீடாக சென்று சரிபார்க்கலாம். அப்படியே இல்லையெனில் ஆதார் கார்டு எண் அல்லது மொபைல் எண் ஆகியவற்றின் உதவியோடு போலி வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் கண்டறிந்து உடனடியாக நீக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே தொழில்நுட்பத்தின் உதவியுடன் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் வாக்காளர் பட்டியல் மற்றும் அடையாள அட்டைகளை இறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மையம் வலியுறுத்தி உள்ளது. தற்போது மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

அனைவரும் ஆதரிக்க மநீம வேண்டுகோள்
எதிர்க்கட்சிகள் எழுப்பும் பல சந்தேகங்களும் கேள்விகளும் மக்கள் நீதி மய்யத்திற்கும் இருந்தாலும், போலி வாக்காளர் அடையாள அட்டைகளை நீக்கம் செய்வதற்கான முதற்படியாக இந்த முயற்சி அமையவேண்டும் என நினைக்கிறோம் என தங்கவேலு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாக்காளர் பட்டியலில் வெவ்வேறு பெயர்களில் தங்களைப் பதிவு செய்துகொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட அடையாள அட்டைகளை வைத்துக்கொண்டு வாக்குப்பதிவு செய்ய முயல்பவர்கள் ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பவர்கள் என்றும் மத்திய அரசின் இந்த முயற்சிக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தரவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் அவர் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications