லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு ரெடி.. கமல்ஹாசன் அறிவிப்பு
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. மக்கள் நலனுக்காக மாற்றத்தை விரும்பும் கட்சியான மக்கள் நீதி மைய்யம் ஒத்த ரீதியான அரசியல் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இப்படியான ஒரு கூட்டணியை முடிவு செய்யும் உரிமையை கட்சித் தலைவரான கமல்ஹாசனுக்கு வழங்குகிறோம். இவ்வாறு அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்பிறகு நிருபர்களிடம் கமல்ஹாசன் அளித்த பேட்டி:
ஒத்த கருத்து
நல்ல வழியில் நல்ல கூட்டணி ஒன்று அமையும். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைய வேண்டும் என்பதில் எங்கள் கட்சியும் நானும் திண்ணமாக உள்ளோம். லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அதற்கு தலைமை பொறுப்பை டாக்டர் மகேந்திரனிடம் ஒப்படைத்துள்ளோம். அதற்கான வேலைகளை இன்று முதல் தொடங்குவார் என்றார்.
இப்போது சொல்ல மாட்டேன்
காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக முன்பு கூறப்பட்டதே என்ற நிருபர்களின் கேள்விக்கு, அந்த பேச்சு இப்பவும் இருக்கிறது. ஆனால் நாங்கள் முடிவெடுத்த பிறகு தெரிவிப்போம், என்றார் கமல்ஹாசன். எந்தெந்த கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணியில் இருக்கும் என்பதை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன். எங்களுடைய பிரச்சாரம் என்பது தமிழகம் முன்னேற்றம் நோக்கியதாக இருக்கும். தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நேர் செய்ய நேரம் வந்துவிட்டது. அதுதான் எங்கள் பிரச்சாரத்தின் கூர்மையாக இருக்கும் என்றார்.
கூட்டணி இல்லை
தமிழகத்தின் மரபணுவை மாற்ற துடிக்கின்ற எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்வதில்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். அப்படியானால் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா என்ற நிருபர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார் கமல்ஹாசன்.
சர்வாதிகாரம் இல்லை
இடைத் தேர்தல் நடைபெற்றால் 20 சட்டசபை தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை அறிவிக்கும். கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை அவர்கள்தானே கொடுக்கிறார்கள். அதிகாரத்தை எடுத்துக் கொள்வதுதான் சர்வாதிகாரம். அவர்கள் கொடுக்கும் வரை காத்திருந்து, அதற்கு நன்றி தெரிவித்து உள்ளேன். இது சர்வாதிகாரம் இல்லை. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.