ப்ரோமோசனில் ஆபிசரான நண்பன்! ஆத்திரத்தில் கொலையாளியான சந்தோஷ்! கொலை செய்த போதே வக்கீலிடமும் ஐடியா!
சென்னை : சென்னை எழும்பூரில் தனியார் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனத்தில் பணி செய்வதில் ஏற்பட்ட தகராறில் அதிகாரியான நண்பனை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவத்தில் தப்பி ஓடிய ஊழியரை போலீசார் பொதுமக்கள் உதவியுடன் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சென்னை எழும்பூர் நெடுஞ்சாலையில் தனியார் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்த விக்கி (எ) விவேக் என்பவர் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி தேவப்பிரியா எழும்பூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இதேபோல் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் . இவர், விவேக் பணியாற்றும் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்குள் வேலை செய்வதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கத்திக் குத்து
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் விவேக் தனது மனைவி தேவப்பிரியாவை எழும்பூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் விட்டுவிட்டு தனது அலுவலகத்திற்கு வந்தார். உடன் பணியாற்றும் சந்தோசும் அலுவலகத்திற்கு வந்துள்ளார். பிறகு அலுவலகம் தொடர்பாக விவேக் மற்றும் சந்தோசுக்கு இடையே காலை 10.45 மணிக்கு திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் அலுவலகத்திற்குள்ளேயே கடுமையாக தாக்கிக்கொண்டனர். ஆத்திரமடைந்த சந்தோஷ் அலுவலகத்தில் இருந்த வயர்கள் வெட்டும் கத்தியை எடுத்து விவேக்கை கொடூரமாக கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தி உள்ளார்.

ஊழியர் வெறிச்செயல்
இதில் வலி தாங்க முடியாமல் விவேக் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். உடனிருந்தவர்கள் சந்தோஷை கட்டுப்படுத்த முயன்றனர். இதனால் அவர்களுக்கும் கத்திக்குத்து விழுந்தது. ஒரு கட்டத்தில் சந்தோஷ் விடாமல் விவேக்கை கத்தியால் குத்தியதால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்து, அலுவலகத்தில் இருந்த சக ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். பின்னர் சந்தோஷ் நிறுவனத்தின் மாடியில் ஏறி கட்டிடம் விட்டு கட்டிடம் தாவி குதித்து தப்பி விட்டார். இதுகுறித்து இன்டர்நெட் நிறுவன ஊழியர்கள் அளித்த புகாரின்படி, எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவேக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?
மேலும் கொலை நடந்த இடத்திற்கு போலீசார் மோப்ப நாயுடன் வந்து ஆய்வு செய்தனர். பிறகு தப்பி ஓடிய சந்தோஷை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் சிறிது நேரத்திலேயே பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தோஷிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், சந்தோஷ் மற்றும் கொலை செய்யப்பட்ட விவேக் ஆகியோர் ஒரே நேரத்தில்தான் இன்டர்நெட் இணைப்பு கொடுக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். நண்பர்களாக தங்களது பணியை செய்துள்ளனர்.

ப்ரோமோசனால் வந்த வினை
இதற்கிடையே விவேக்கிற்கு நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன் பிறகு விவேக் கட்டுப்பாட்டின் கீழ் சந்தோஷ் பணியாற்றி வந்துள்ளார். வேலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் விவேக் பரிந்துரைப்படி தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் சந்தோஷை பணியில் இருந்து நீக்கி உள்ளனர். அதற்கு விவேக் தான் காரணம் என சந்தோஷ் தனது நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். பின்னர் ஒரு வழியாக மீண்டும் கடந்த வாரம்தான் சந்தோஷ் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்தது முதல் விவேக்கிற்கும் சந்தோஷிற்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம்
அதன்படி, நேற்று ஒரு நிறுவனத்திற்கு இன்டர்நெட் இணைப்பு வழங்குவது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது விவேக் மீண்டும் பணியில் இருந்து நீக்கி விடுவேன் என்று ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், விவேக்கை படுகொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் எழும்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விவேக்கை கொலை செய்துவிட்டு, சந்தோஷ் கட்டிடம் விட்டு கட்டிடம் தாவி சாலையில் ஓட முயன்றார்.

மக்களுக்கும் மிரட்டல்
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை பிடிக்க முயன்றனர். உடனே ரத்தம் சொட்டிய கத்தியுடன் பொதுமக்களிடம் 'என்னை பிடிக்க முயன்றால் உங்களை கொலை செய்துவிடுவேன்.... என்னை தப்பிக்க விடுங்கள்' என்று மிரட்டியுள்ளார். அந்த நேரத்தில் போலீசார் சந்தோஷை பிடிக்க முயன்றனர். உடனே அருகில் வந்தால். எனக்கு நானே கழுத்தை அறுத்து செத்துவிடுவேன்' என்று மிரட்டியுள்ளார். இதனால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் திகைத்தனர்.

வக்கீலுடன் ஆலோசனை
பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருந்த குற்றவாளி சந்தோஷ், செல்போனில் தனக்கு தெரிந்த வக்கீல் ஒருவரை சம்பவ இடத்திற்கு போன் செய்து வரவழைத்தார். பிறகு சந்தோஷின் வக்கீல் சம்பவ இடம் வந்த பிறகு வக்கீலிடம், நான் போலீசில் சரணடையலாமா.... எந்த பிரச்னையும் இல்லையே என்று கேட்டார். அதற்கு அந்த வக்கீல் சரணடையலாம் என்றார். அதன்பிறகுதான், குற்றவாளி சந்தோஷ் போலீசாரிடம் சரணடைந்தார்.












Click it and Unblock the Notifications