மாண்டஸ் புயல்.. 8 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகும் மிககனமழை.. சென்னையையும் விடாதாம்..புது அப்டேட்
சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 7 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது.
வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவானது. இந்த புயல் நேற்று இரவு மாமல்லபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது.
இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வந்தது. மேலும் புயல் கரையை கடப்பதால் தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கரையை கடந்த புயல்
இந்நிலையில் தான் இந்த புயல் நேற்று இரவு 9.30 மணி முதல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 2.30 மணியளவில் முழுமையாக புயல் கரையை கடந்தது. புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை காற்று வீசியது. இன்று காலையிலும் சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

8 மாவட்டங்களில் மிக கனமழை
அதன்படி இன்றைய மழை நிலவரம் பற்றி சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி மாண்டஸ் புயல் கரையை கடந்திருந்தாலும் கூட தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

7 மாவட்டங்களில் கனமழை
மேலும் 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ஈரோடு, மாவட்டங்களிலும் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீரமைப்பு பணி தீவிரம்
மேலும் மாண்டஸ் புயலால் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. கடற்கரையில் நிறுத்தப்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளன. இதனை ஆய்வு செய்து சேத சீரமைப்பு பணியை தமிழக அரசு துவக்கி முடுக்கி விட்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து வருவதோடு, அதுதொடர்பாக இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications